உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரோட்டில் உள்ள தொடர் வெள்ளைபட்டைகளால் அதிரும் வாகனங்கள்

ரோட்டில் உள்ள தொடர் வெள்ளைபட்டைகளால் அதிரும் வாகனங்கள்

ரோட்டோரத்தில் குப்பை எரிப்பு

பொள்ளாச்சி -- பல்லடம் ரோட்டில், ராசக்காபாளையம் அருகே ரோட்டின் ஓரத்தில் குப்பைக்கு அவ்வப்போது தீ வைத்து எரிக்கின்றனர். இதனால், ஏற்படும் புகைமூட்டத்தால் அவ்வழியில் செல்லும் வாகன ஓட்டுநர்களுக்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- நவீன், பொள்ளாச்சி.

வாகனங்கள் அதிருது!

பொள்ளாச்சி, பாலக்காடு ரோட்டில், முருகன் நிலையம் முதல் ஜமீன்முத்தூர் வரை, ரோட்டில் ஆங்காங்கே தொடர் வெள்ளைப்பட்டைகள் தடிமனாக அமைக்கப்பட்டுள்ளதால், வாகன ஓட்டுநர்கள் தடுமாறி செல்லும் நிலை உள்ளது. சில நேரங்களில் விபத்தும் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, வெள்ளைப்பட்டை தடிமனை குறைக்க வேண்டும்.-- கண்ணபிரான், பொள்ளாச்சி.

விபத்து அபாயம்

கிணத்துக்கடவு அருகே உள்ள, வடசித்தூர் பகுதியில் நான்கு ரோடு சந்திப்பு அருகே, ரோட்டின் ஓரத்தில் கனரக வாகனங்கள் 'பார்க்கிங்' செய்யப்படுவதால், பைக் ஓட்டுநர்கள் தடுமாறி செல்லும் நிலை உள்ளது. எனவே, இங்கு வாகனங்கள் 'பார்க்கிங்' செய்யாதபடி அறிவிப்பு வைக்க வேண்டும். அதை மீறி நிறுத்தப்படும் வாகனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.-- ரவிக்குமார், வடசித்தூர்.

வேகத்தடை தெரியல

பொள்ளாச்சி, மகாலிங்கபுரம் பகுதியில் உள்ள வேகதடைகளில் வெள்ளை குறியீடுகள் இல்லாததால், இரவு நேரத்தில் இவ்வழியாக செல்லும் வாகனங்கள் தடுமாறி செல்கின்றன. எனவே, இங்கு அமைக்கப்பட்ட வேகத்தடைகள் அருகே, வெள்ளைநிற குறியீடுகள் அமைக்க வேண்டும்.-- பாபு, பொள்ளாச்சி.

மக்கள் பாதிப்பு

உடுமலை நகராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று டாக்டர் இல்லாததால் பூட்டிக் கிடந்தது. இதனால், அங்கு வந்த பொதுமக்கள் சிகிச்சை பெற முடியாமல் பாதிக்கப்பட்டனர். எனவே, அங்கு கூடுதல் டாக்டர்களை நியமிக்க சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- முருகன், உடுமலை.

சிதிலமடைந்த மூடிகள்

உடுமலை, பசுபதி வீதியில் பாதாள சாக்கடை ஆள் இறங்கும் குழியின் மூடி சிதிலமடைந்து உடைந்து விழும் நிலையில் உள்ளது. அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டுநர்களுக்கு ஆபத்தான பகுதியாக உள்ளது. மூடியின் மீது கனரக வாகனங்கள் செல்வது விபத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது.- ராஜேந்திரன், உடுமலை.

விழும் நிலையில் கிளைகள்

உடுமலை அருகே குரல்குட்டையிலிருந்து குறிச்சிக்கோட்டை செல்லும் சாலையில் ஆலாம்பாளையம் அருகில் மரக்கிளைகள் காய்ந்து முறிந்து விழும் நிலையில் உள்ளது. அவ்வழியாக செல்வோருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் மரக்கிளைகளை அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.- ராம்ராஜ், உடுமலை.

ஊராட்சி பலகை சேதம்

உடுமலை அருகே, மடத்துக்குளம் ஒன்றியத்தில் கடத்துாரிலுள்ள ஊராட்சி பலகை சேதமடைந்துள்ளது. இதை ஊராட்சி நிர்வாகத்தினர் கண்டுகொள்ளாமல் உள்ளனர். எனவே, தகவல் பலகையை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கருப்பசாமி, உடுமலை.

தெருநாய்கள் தொல்லை

கணக்கம்பாளையம் எஸ்.வி.,புரம், பி.வி. லே-அவுட் பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. வாகன ஓட்டுநர்கள் இரவு நேரங்களில் அவ்வழியாக செல்வதற்கு அச்சப்படுகின்றனர். வாகனங்களின் குறுக்கே செல்வதால், அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது. குழந்தைகளை துரத்தி அச்சுறுத்துகின்றன.- செல்வராஜ், கணக்கம்பாளையம்.

சுகாதார சீர்கேடு

உடுமலை, வெங்கடேஸ்வரா ரோட்டில் கால்நடை மருத்துவமனை அருகே திறந்த வெளிக்கழிப்பிடமாக மாறியுள்ளது. மிகுதியான துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதி வழியாக செல்லும் மக்கள் முகம் சுழிக்கின்றனர். குப்பைக்கழிவுகளும் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.- திலகம், உடுமலை.

புதர் அகற்றப்படுமா?

கிணத்துக்கடவு ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண் அலுவலக கட்டடத்தின் ஓரத்தில், செடிகள் வளர்ந்து புதர் போல காட்சியளிக்கிறது. இதை அதிகாரிகள் கவனித்து உடனடியாக அகற்றம் செய்ய வேண்டும்.- தனசேகர், கிணத்துக்கடவு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !