வீணாகும் வழிகாட்டி பலகை: சுற்றுலா பயணியர் அதிருப்தி
வால்பாறை; வால்பாறையில் வழிகாட்டி பலகை, ரோட்டோரத்தில் வீணாகி வருவதால், சுற்றுலா பயணியர் வழித்தடம் தெரியாமல் அதிருப்தியடைந்துள்ளனர்.வால்பாறை அடுத்துள்ளது மாணிக்கா எஸ்டேட் மாதா கோவில் சந்திப்பு. இந்த சந்திப்பில் சோலையாறு அணை, வால்பாறை, குரங்குமுடி பகுதிக்கு செல்லும் மூன்று ரோடுகள் பிரிகின்றன. சந்திப்பு பகுதியில், சுற்றுலா பயணியருக்கு வழிகாட்டுவதற்கு வசதிக்காக, நெடுஞ்சாலைத்துறை சார்பில் வழிகாட்டி பலகை வைக்கப்பட்டது. அந்த இடத்தில் ரவுண்டானா அமைப்பதற்காக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வழிகாட்டி பலகையை அகற்றினர்.ரவுண்டானா அமைக்கும் பணி நிறைவடைந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் இன்று வரை வழிகாட்டி பலகை வைக்கப்படவில்லை. ரோட்டோரத்தில் வீணாக வைக்கப்பட்டுள்ளது. இதனால், வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணியர் செல்லும் வழித்தடம் தெரியாமல் தவிக்கின்றனர். நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அலட்சியத்தால் சுற்றுலா பயணியர் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, 'ஆள் பற்றாக்குறையால், கழற்றிய வழிகாட்டி பலகை மீண்டும் அமைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறை பணியாளர்களை கொண்டு, விரைவில் வழிகாட்டி பலகை மாதா கோவில் சந்திப்பில் அமைக்கப்படும்,' என்றனர்.