உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோர்ட்டின் முன் கழிவு நீர்; ஸ்டே வாங்குவது யார்?

கோர்ட்டின் முன் கழிவு நீர்; ஸ்டே வாங்குவது யார்?

தெருவிளக்கு பழுது

ஹோப்காலேஜ், 24வது வார்டு, திரு.வி.க., வீதியில், கம்பம் எண் மூன்றில், பல மாதங்களாக தெருவிளக்கு எரியவில்லை. அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்தும், புதிய தெருவிளக்கு பொருத்தப்படவில்லை.இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள், குடியிருப்பு வாசிகள் பாதிப்படைகின்றனர்.- சாந்தாமணி, ஹோப்காலேஜ்.

சாக்கடையில் உணவுகள்

கவுண்டம்பாளையம், 33வது வார்டில், மாநகராட்சி ஆரம்ப பள்ளியில், சத்துணவில் மீதமாகும் உணவுகளை, சாக்கடை கால்வாயில் கொட்டுகின்றனர். இதனால், கால்வாயில் அடைப்பு ஏற்படுகிறது. உணவுக்கழிவுகள் அழுகி, கடும் துர்நாற்றமும் வீசுகிறது.- முருகேசன், கவுண்டம்பாளையம்.

இருக்கு... ஆனா எரியாது

பீளமேடு, திருமகள் நகர், 10வது கிராஸ், ஒன்றாவது மெயின் சாலையில் உள்ள மின்கம்பத்தில் கடந்தாண்டு புதிய மின்விளக்கு பொருத்தப்பட்டது. ஆனால், விளக்கிற்கு மின்இணைப்பு கொடுக்கவில்லை. ஒரு வருடமாக வலியுறுத்தியும் தெருவிளக்கு மின்இணைப்பு கொடுக்கப்படாமல் உள்ளது.- வேலுசாமி, திருமகள் நகர்.

பெரிய, பெரிய பள்ளங்கள்

வெள்ளக்கிணறு, ரயில்வே கேட் சாலை, மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளது. சாலை முழுவதும் பெரிய, பெரிய பள்ளங்கள் காணப்படுகின்றன. பல மாதங்களாக புகார் தெரிவித்தும் சாலை சீரமைக்கப்படவில்லை. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்வதால், அடிக்கடி இச்சாலையில் விபத்து நடக்கிறது.- ராஜேந்திரன், வெள்ளக்கிணறு.

புதர்மண்டிய பூங்காக்கள்

வடவள்ளி, பாரதி நகர் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள சிறுவர் பூங்காக்கள் போதிய பராமரிப்பின்றி உள்ளது. பூங்கா முழுவதும் அடர்ந்த புதரும், விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்தும் காணப்படுகிறது. முறையாக சுத்தம் செய்யாததால், குப்பை தேங்கிக்கிடக்கிறது.- செரீனா, வடவள்ளி.

பள்ளி அருகே குப்பை

ரத்தினபுரி, சம்பத் வீதி, மாநகராட்சி ஆரம்பப்பள்ளி அருகே தொடர்ந்து சிலர் குப்பையை வீசிச்செல்கின்றனர். பல வாரங்களாக கிடக்கும் கழிவுகளால், பள்ளி வளாகத்தில் துர்நாற்றம் வீசுகிறது. பாதி சாலை வரை சிதறிக்கிடக்கும் கழிவுகளால், வாகனஓட்டிகளும் பாதிப்படைகின்றனர்.- செல்வம், ரத்தினபுரி.

அடிப்படை வசதியின்றி தவிப்பு

நாச்சிபாளையம், ஆரஞ்சு கார்டன் பகுதியில், 25க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. தார் சாலை, தெருவிளக்கு, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளில்லை. குடியிருப்புவாசிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையுமில்லை.- பாலு, நாச்சிபாளையம்.

திறந்தநிலை சாக்கடை

கோணவாய்க்கால்பாளையம், நடுநிலைப்பள்ளி சுற்றுச்சுவர் ஒரம்மேற்குப்பகுதியில், பாதாள சாக்கடை சேதமடைந்துள்ளது. நடந்துசெல்வோர் கால் இடறி விழுவதுடன், வாகனங்களும் குழியில் சிக்கிக்கொள்கின்றன. புதிய சிலாப் கொண்டு பாதாள சாக்கடை கால்வாயை மூட வேண்டும்.- மனோகரன், கோணவாய்க்கால் பாளையம்.

சாலையில் சாக்கடை

கோவை கோர்ட் முன்புறம், கோபாலபுரம் முதல் வீதியில், பாதாள சாக்கடை கால்வாய் அடைபட்டு கழிவுநீர் நிரம்பி சாலையில் வழிந்தோடுகிறது. சாக்கடை கால்வாயும் முறையாக துார்வாராததால், கழிவுநீர் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுகிறது. நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.- ஜெசி, காந்திபுரம்.

மின்மாற்றியால் விபத்து அபாயம்

பீளமேடு காவல்நிலையம் அருகே வ.உ.சி., காலனியில், மின்மாற்றி வாகனஓட்டிகளுக்கு இடையூறாக உள்ளது. ஆபத்தான வகையில் உள்ளதால் விபத்துகள் நடக்கவும் வாய்ப்புள்ளது. மின்மாற்றியை சாலையோரம் மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சுரேஷ்குமார், தண்ணீர்பந்தல்.

நோய் பிறக்க இதுவே வழி

குரும்பபாளையம் - கள்ளிபாளையம் செல்லும் சாலையில், ஆதித்யா கல்லுாரி அருகில், சாலையின் இருபுறமும் திறந்தவெளியில் குப்பை கொட்டப்படுகிறது. தேங்கி கிடக்கும் கழிவுகளால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால் விரைந்து கழிவுகளை அகற்ற வேண்டும்.- நாராயணசாமி, குரும்பபாளையம்.

பள்ளி அருகே அவலம்

கணபதி, அரசு மேல்நிலைப்பள்ளி நுழைவு வாயில் அருகே சாக்கடை நிரம்பி, கழிவுநீர் வெளியேறுகிறது. கடந்த ஒரு மாதமாக துர்நாற்றத்துடன் கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. கவுன்சிலரிடம் புகார் செய்தும் நடவடிக்கையில்லை.- தங்கவேல், கணபதி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ