உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குடிநீர் குழாய் பதிப்பது பாதியில் நிறுத்தம்; நகராட்சி அதிகாரிகள் அலட்சியம்

குடிநீர் குழாய் பதிப்பது பாதியில் நிறுத்தம்; நகராட்சி அதிகாரிகள் அலட்சியம்

வால்பாறை; புதிதாக குடிநீர் குழாய் பதிக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டதால், எஸ்டேட் தொழிலாளர்களும், வாகன ஓட்டுநர்களும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். வால்பாறை நகருக்கு, 8 கி.மீ., தொலைவில் உள்ள அக்காமலை செக்டேமில் இருந்து, குழாய் வாயிலாக குடிநீர் கொண்டு வரப்பட்டு, தொட்டியில் தேக்கி வீடு மற்றும் கடைகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. வால்பாறை நகரில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் நிலையில், கடந்த சில மாதங்களாக குடிநீர் தட்டுப்பாட்டால் மக்கள் அவதிக்குள்ளாகினர். பழைய குடிநீர் குழாய் அடிக்கடி பழுதடைந்த நிலையில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்தது. இதனிடையே, குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், அக்காமலை செக்டேமில் இருந்து வால்பாறை நகர் வரை பழைய குடிநீர் குழாய்களை மாற்றி, புதிய குழாய் அமைக்கும் பணி கடந்த ஆண்டு துவங்கப்பட்டது. ஆனால், பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதாலும், குழாய் பதிக்க தோண்டப்பட்ட குழி மூடப்படாமல் உள்ளதாலும் எஸ்டேட் தொழி லாளர்களும், வாகன ஓட்டுநர்களும் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். தொழிலாளர்கள் கூறியதாவது: புதிதாக குடிநீர் குழாய் பதிக்க கருமலை, பச்சமலை, நடுமலை ஆகிய எஸ்டேட் பகுதியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை ரோட்டில் குழி தோண்டப்பட்டது. குழாய் பதித்தபின் மூடாமல் விட்டுவிட்டனர். இதனால் இரவு நேரங்களில் நடந்து செல்லும் தொழிலாளர்கள் தவறி விழுந்து காயமடைகின்றனர். நகராட்சி அதிகாரிகளின் அலட்சியத்தால் தொழிலாளர்கள் நடந்து செல்ல முடியாமல் தவிக்கின்றனர். இது குறித்து பல முறை புகார் தெரிவித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொழிலாளர்களின் சிரமத்தை புரிந்து கொண்டு, தோண்டப்பட்ட குழியை உடனடியாக மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, கூறினர். நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, 'வால்பாறை நகர் பகுதி மக்களின் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், ஒரு கோடியே, 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 8 கி.மீ., துாரத்திற்கு புதிதாக குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடக்கிறது. மழை காரணமாக, பணி மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கூடுதல் நிதி ஒதுக்கிய பின் மன்றக்கூட்டத்தில் ஒப்புதல் பெற்று, ரோடுகளில் தோண்டப்பட்ட குழிகள் மூட நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி