உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  மேற்குபுறவழிச்சாலை பணி 80 சதவீதம் நிறைவு விரைந்து முடிக்க திட்டம்

 மேற்குபுறவழிச்சாலை பணி 80 சதவீதம் நிறைவு விரைந்து முடிக்க திட்டம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மேற்கு புறவழிச்சாலை பணிகள், 80 சதவீதம் நிறைவடைந்துள்ளன. பணிகளை விரைந்து முடிக்க திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பொள்ளாச்சி நகரில் நிலவும் நெரிசலை கட்டுப்படுத்த மேற்கு புறவழிச்சாலை திட்டம் செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இது குறித்து எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெய ராமன், அப்போதைய முதல்வர் பழனிச்சாமியிடம் வலியுறுத்தினார்.மேற்கு புறவழிச்சாலை அமைப்பதற்காக,மொத்தம், ரூ ,73 கோடியே, 35 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த சாலை, கோவை ரோடுஆச்சிப்பட்டி சக்தி மில் அருகே துவங்கி, சங்கம்பாளையம், ஆர்.பொன்னாபுரம், தாளக்கரை, ஜமீன்முத்துார், நல்லுார் வழியாக, ஜமீன் ஊத்துக்குளி கைகாட்டி வரை, 8.9 கி.மீ., துாரத்துக்கு, 10 மீட்டர் அகலத்தில் அமைக்கப்படுகிறது. ரோட்டின் இருபக்கமும், மூன்று மீட்டருக்கு மழைநீர் வடிகால் அமைக்கப்படுகிறது. இந்த புறவழிச்சாலை பணிக்காக, விவசாயிகள் உள்ளிட்ட தனியாரிடம் இருந்து, 34,718 சதுர மீட்டர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. கடந்த, 2021ம் ஆண்டு திட்டப் பணிகள் துவங்கிய நான்கு மாதங்கள் சுறுசுறுப்பாக நடந்தது. இதற்காக, 171 மரங்கள் வெட்டப்பட்டன.மேலும், ஜமீன் ஊத்துக்குளியில் இருந்து கோவை ரோடு ஆ.சங்கம்பாளையம் வரை, நான்கு கி.மீ., துாரத்துக்கு ஐந்து கோடி ரூபாய் செலவில் புதிய குடிநீர் குழாய் மாற்றி அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதை தொடர்ந்து பணிகள் கிடப்பில் போடப்பட்டதால் கிராம மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாயினர். கடந்த சில மாதங்களுக்கு முன் பணிகள் மீண்டும் துவங்கப்பட்டுள்ளன. அதில், கிருஷ்ணா குளம் ரோட்டில் இருந்து ஜமீன் ஊத்துக்குளியை இணைக்கும் ஒரு வழிப்பாதை அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் விரைந்து முடிக்க திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நெடுஞ்சாலைத்துறை (திட்டங்கள்) அதிகாரிகள் கூறுகையில், 'மேற்கு புறவழிச்சாலை திட்டப்பணிகள் முடிய அடுத்தாண்டு வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது, 80 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. முதல் கட்டமாக போடப்பட்ட தார் ரோட்டில், மேலும், இன்னொரு முறை தார் தளம் அமைத்து மேம்படுத்தப்படும். பணிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை