உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / என்.எஸ்.ஆர்., ரோட்டில் என்ன இது இவ்வளவு குப்பை! திறந்தவெளியில் குப்பை கொட்டுவோரால் அவஸ்தை

என்.எஸ்.ஆர்., ரோட்டில் என்ன இது இவ்வளவு குப்பை! திறந்தவெளியில் குப்பை கொட்டுவோரால் அவஸ்தை

மோசமான கழிப்பறை

வடவள்ளி பத்திரப்பதிவு அலுவலக கழிப்பறை, பராமரிப்பின்றி மோசமான நிலையில் உள்ளது. சுத்தம் செய்யாததால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. ஆண்கள் கழிப்பறைக்கு கதவு இல்லாமல் இருப்பதால், பயன்படுத்த முடியவில்லை.- வெங்கடேஷ், வடவள்ளி.

புதர்மண்டிய பூங்கா

சீரநாயக்கன்பாளையம், ஜெகதீஷ் நகர் பூங்கா மற்றும் அதன் சுற்றுப்புறத்திலும் புதர்மண்டிக்கிடக்கிறது. இதனால், பூங்கா மற்றும் குடியிருப்பு பகுதியில் தேள், பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் வருகின்றன. அடர்த்தியாக வளர்ந்துள்ள புதர் மற்றும் மரக்குப்பையை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும்.- சங்கர், சீரநாயக்கன்பாளையம்.

சேற்றில் மாட்டும் வாகனங்கள்

விளாங்குறிச்சி, 22வது வார்டு, உதய் நகர் பகுதியில் தார் சாலை அமைத்துத் தர, பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். மண் சாலையில், மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக இருக்கிறது. சேற்று மண்ணில், வாகனங்கள் அடிக்கடி சிக்கிக்கொள்கின்றன.- சவுந்திரராஜன், விளாங்குறிச்சி.

தெருவிளக்கு பழுது

செல்வபுரம், பேரூர் மெயின் ரோடு, 76வது வார்டு, சிஜிவி நகர் பூங்காவிற்குஎதிரில், தெருவிளக்கு பழுதாகியுள்ளது. சிறிது நேரம் எரிகிறது, மீண்டும் எரியாமல் போகிறது.விளக்கு பழுதை சரிசெய்து தர வேண்டும்.- ராஜ் முத்துக்குமார், செல்வபுரம்.

நோய்த்தொற்று அபாயம்

வேலாண்டிபாளையம், தடாகம் ரோடு, 43வது வார்டு, குடியிருப்பு பகுதியில் சாக்கடை கால்வாய் துார்வாராததால், கழிவுநீர் நிரம்பி சாலையில் வழிகிறது. இதில் கொசுப்புழுக்கள் உற்பத்தி அதிகம் இருப்பதுடன், கடும் துர்நாற்றம் வீசுகிறது. நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.- சண்முகம், வேலாண்டிபாளையம்.

வீணாகும் குடிநீர்

தண்ணீர்பந்தல் மெயின் ரோடு, 24வது வார்டில், குடிநீர் குழாய் உடைந்து சாலையில் பெருமளவு தண்ணீர் வீணாகிறது. கடந்த 10 நாட்களுக்கு மேலாக புகார் செய்தும், எந்த நடவடிக்கையும் இல்லை. வாகனஓட்டிகள், பாதசாரிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.- நாகமாணிக்கம், தண்ணீர்பந்தல்.

சாலை ஆக்கிரமிப்பு

உப்பிலிபாளையம், 60வது வார்டு, மாரியம்மன் கோவில் வீதியை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இதனால், 11 அடி அகலம் கொண்ட சாலை வெறும், மூன்று அடியாக குறுகிவிட்டது. இருசக்கர வாகனங்கள் மட்டுமே, தற்போது செல்ல முடிகிறது.- கவுதம், உப்பிலிபாளையம்.

சாலையில் குவியும் குப்பை

சாய்பாபாகாலனி, என்.எஸ்.ஆர்.,ரோடு, இரண்டாவது கிராசில், சாலையோரம் பெருமளவு குப்பை குவிந்துள்ளது. பல நாட்களாக தேங்கியுள்ள கழிவுகளால், கடும் துர்நாற்றம் வீசுகிறது. குப்பையை அகற்றுவதுடன், சாலையோரம் திறந்தவெளியில் குப்பை கொட்டுவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ஜெயந்தி சங்கர், சாய்பாபா காலனி.

சாக்கடை அடைப்பு

பொன்னையராஜபுரம், 77வது வார்டு, லீலா அபார்ட்மென்ட்டில், கடந்த 10 நாட்களுக்கு மேலாக சாக்கடை நிரம்பி சாலையில் வழிந்தோடுகிறது. குடியிருப்பு பகுதி முழுவதும் சுகாதாரமற்ற சூழல் நிலவுகிறது. கடும் துர்நாற்றம் வீசுவதால், விரைந்து சாக்கடை கால்வாய் அடைப்பை சரிசெய்ய வேண்டும்.- ராம்பிரபு, பொன்னையராஜபுரம்.

விஷ ஜந்துக்களால் கடும் அபாயம்

நரசிம்மநாயக்கன்பாளையம், இரண்டாவது வார்டு, டீச்சர்ஸ் காலனியில், மழைநீர் வடிகால் பாதையில் கட்டடக்கழிவுகளை கொட்டி, கரையோரத்தை ஆக்கிரமிப்பு செய்யும் செயல்களில், சிலர் ஈடுபட்டு வருகின்றனர். மழைக்காலங்களில் இதனால் குடியிருப்புகளுக்குள் கழிவு நீர் வருவதற்கு வாய்ப்புள்ளது.- திலகவதி மணி, டீச்சர்ஸ் காலனி.

'ஆமை' பணிகளால் அவதி

ஒண்டிப்புதுார், 57வது வார்டு, தாகூர் நகர் வரிவாக்கம் செல்லும் பிரதான சாலையில் பாதாள சாக்கடை பணிக்காக அனைத்து சாலைகளும் மூடப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்கள் மட்டுமே செல்ல முடியும். அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியவில்லை. விரைந்து சாலைப்பணிகளை முடித்து சாலையை சீரமைக்க வேண்டும்.- சவுண்டப்பன், ஒண்டிப்புதுார்.

புதர்மண்டிய பூங்கா

கோவை மாநகராட்சி, 40வது வார்டு, சோபா நகர், சிறுவர் பூங்கா போதிய பராமரிப்பின்றி உள்ளது. பூங்கா முழுவதும் குப்பையாக உள்ளது. புதர் மண்டி இலை சருகுகள் நிரம்பி கிடக்கிறது. கோடை காலத்தில் சருகில் தீப்பிடிக்க வாய்ப்புள்ளது. புதர்மண்டி இருப்பதால் பாம்பு, தேள் போன்ற விஷ உயிரினங்கள் உள்ளது.- சுதா, சோபா நகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை