உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பாதசாரிகள் கடக்க வழித்தடம் எங்கே? வாகனங்கள் இடையே சங்கடம்

பாதசாரிகள் கடக்க வழித்தடம் எங்கே? வாகனங்கள் இடையே சங்கடம்

கோவை: கோவையின் முக்கிய சாலைகளை, பாதசாரிகள் பாதுகாப்பாக கடப்பதற்கு வழித்தடம் இல்லாததால், பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் சிரமப்படுகின்றனர். பாதசாரிகள் பாதுகாப்பாக சாலையை கடப்பதற்கான உள்கட்டமைப்பை, மாநகராட்சி நிர்வாகம் உருவாக்க கோரிக்கை எழுந்துள்ளது. கோவை நகரில் அவிநாசி ரோடு, திருச்சி ரோடு, ஆத்துப்பாலம் ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு என முக்கிய சாலைகளில், வாகன போக்குவரத்தை எளிமைப்படுத்த, மேம்பாலங்கள் கட்டப்பட்டு உள்ளன. அதே நேரம் ரோட்டை கடக்கும் பாதசாரிகளை பற்றி, அரசு துறையினர் கவலைப்படாமல் இருக்கின்றனர். சாலையை கடக்க முடியாமல் குழந்தைகள், பெண்கள், முதியோர் என பாதசாரிகள் மிகுந்த சிரமப்படுகின்றனர். அடிக்கடி விபத்தையும் சந்திக்கின்றனர். இதுதொடர்பாக, மறுமலர்ச்சி மக்கள் இயக்க தலைவர் ஈஸ்வரன் கேள்வி எழுப்பி, கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் மற்றும் மாநகர போலீஸ் கமிஷனர் ஆகியோருக்கு, கடிதம் எழுதியுள்ளார். அவர் கூறியதாவது: கோவை நகர சாலைகளில் சிக்னல் அமைக்காததால், வாகனங்கள் அசுர வேகத்தில் செல்கின்றன. அலுவலகங்களுக்கும், பள்ளிகளுக்கும் தினமும் சென்று வருவோர், சாலையை கடக்க சிரமப்படுகின்றனர். ஐ.ஆர்.சி., விதிமுறைப்படி, நகரில் வணிகப் பகுதியாக இருப்பின், 150 மீட்டருக்கு ஓரிடத்தில் பாதுகாப்பாக பாதசாரிகள் கடக்கும் பகுதி அமைக்க வேண்டும். மக்கள் வசிக்கும் பகுதியில், 250 மீட்டருக்கு ஒரு இடத்தில் பாதசாரிகள் கடக்க வசதி உருவாக்க வேண்டும். இதன்படி பார்த்தால், 300 இடங்களில் பாதசாரிகள் கடக்கும் பகுதியும், சிக்னல்களும் அமைத்திருக்க வேண்டும். ஆனால், அவிநாசி ரோட்டில் - 7, சத்தி ரோடு - 2, திருச்சி ரோடு - 1, மேட்டுப்பாளையம் ரோடு - 2, சிறுவாணி ரோடு - 1, பொள்ளாச்சி ரோடு - 1 என, 14 இடங்களில் மட்டுமே பாதசாரிகள் கடப்பதற்கான சிக்னல்கள் இருப்பது, தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக தெரியவந்தது. மாநகராட்சி பகுதியில், பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தும் இடங்களில், 'எஸ்கலேட்டருடன்' கூடிய நடைபாதை மேம்பாலங்கள் மற்றும் பாதசாரிகளுக்கான சிக்னல்கள் அமைக்க வேண்டும். முக்கியமாக, காந்திபுரம், ரயில்வே ஸ்டேஷன், உக்கடம் மற்றும் சிங்காநல்லுார் பகுதியில், எஸ்கலேட்டருடன் நடைபாதை அவசியம் தேவை. ஐ.ஆர்.சி. வழிகாட்டுதலை பின்பற்றி, பாதுகாப்பாக பாதசாரிகள் சாலையை கடப்பதற்கான உள்கட்டமைப்பை, மாநகராட்சி நிர்வாகம் உருவாக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை