பி.என்.புதுார் போஸ்ட் ஆபீஸ் கீழே மாற்றப்படுமா? மாடியில் இருப்பதால் முதியோர் கடும் சிரமம்
சாலை ஆக்கிரமிப்பு
டாடாபாத் ராதாகிருஷ்ணா சாலையில் உள்ள கடைகள் பல, சாலையை ஆக்கிரமித்து போர்டுகளை வைத்துள்ளதால், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. இதனை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும். -முருகன், டாடாபாத். போக்குவரத்து நெரிசல்
இடையர்வீதியில், சாலையின் இருபுறமும் தாறுமாறாக இரண்டு சக்கர வாகனங்கள் நிறுத்துவதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சிறிய துாரத்தை கடப்பதற்கு, நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. -கார்த்திக், பீளமேடு. சாலை சேதம்
கவுண்டம்பாளையம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், அரசு குடியிருப்புக்குள் தார்சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. மேற்கு மண்டல மாநகராட்சி அலுவலகத்திற்கு பல முறை புகார் கடிதம் கொடுத்தும், எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. - சண்முகம், கவுண்டம்பாளையம். முதியோர்கள் அவதி
பி.என்.புதுார் தபால் அலுவலகம், ஒரு குறுகிய சந்தில் முதல் மாடியில் அமைத்துள்ளது. தபால் அலுவலகத்தை முதியோர் அதிகம் பயன்படுத்துகின்றனர். குறுகிய இடம் அதுவும் மாடியில் இருப்பதால், பயன்பாட்டில் சிரமம் எழுந்துள்ளது. இந்த அலுவலகத்தை, மருதமலை ரோட்டில் தரைத்தளத்திற்கு மாற்றவேண்டும். -சங்கர், கோவை. விபத்து அபாயம்
வீடுகளுக்கு குழாய் மூலம் எரிவாயு வினியோகிக்கும் திட்டத்தின் கீழ், விளாங்குறிச்சி பகுதிகளில் பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகளில் போதிய பாதுகாப்பு விதிமுறைகள் ஏதும் பின்பற்றாமல், குழி தோண்டி அப்படியே விட்டுச்சென்றுள்ளனர். கடந்த ஒரு வாரமாக தெரு விளக்கு எரியாத சூழலில், தோண்டப்பட்ட குழிகளால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. - காஞ்சனா, விளாங்குறிச்சி சாலை. விஷப்பூச்சிகள் அச்சம்
நீலிக்கோணம்பாளையம் பழைய தபால் நிலையம் எதிரில் (வார்டு எண் 59) உள்ள சாக்கடை வாய்க்காலில் செடிகள் வளர்ந்து அடைப்பு ஏற்படுகிறது. மேலும் விஷ பூச்சிகள் இருப்பதால், அருகில் உள்ள வீடு மற்றும் கடைகளில் உள்ளோர் சிரம்மப்படுகின்றனர். - சேகர், நீலிக்கோணம்பாளையம். மூடப்படாத குழிகள்
கிழக்கு மண்டலம், திருச்சி ரோட்டில் வசந்தாமில் முதல் உழவர் சந்தை வரை குழாய் பதிக்க தோண்டிய குழி, சரியாக மூடாததால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். - ராஜேந்திரன், சிங்காநல்லுார். 8. வேகத்தடை அவசியம்
வடவள்ளி லட்சுமி நகர் ஆர்ச் முன் உள்ள வளைவு ரோட்டில், வேகத்தடை இல்லாமையால் வாகனங்கள் அதிவேகமாக செல்கிறது. பள்ளிகள் நிறைந்த பரபரப்பான சாலை என்பதால், வேகத்தடை அமைப்பது விபத்துக்களை தடுக்கும். -வாணி, வடவள்ளி. சுகாதார சீர்கேடு
ராமநாதபுரம் சவுரிபாளையம் பிரிவில், சாக்கடை அடைத்து உள்ளது. கொசு உற்பத்தியாவதால், பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் எழுந்துள்ளது. துர்நாற்றம் தாங்கமுடியாத அளவில் உள்ளதால், உடனடியாக சரிசெய்யவேண்டும். -மனோகரன், ராமநாதபுரம்.