அரசு மருத்துவமனையில் டேக் முறை வருமா; வராதா? பரிசீலனை செய்வதாக சொல்கிறார் டீன்
கோவை: கோவை அரசு மருத்துவமனையில், 'டேக் முறை' அமல்படுத்துவது தொடர்பாக பரிசீலித்து வருவதாக, டீன் நிர்மலா தெரிவித்தார்.கடந்த ஆக., மாதம், கொல்கத்தாவில் பெண் டாக்டர் கொலை செய்யப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. தற்போது சென்னை கிண்டி அரசு மருத்துவமனை டாக்டர் பாலாஜி மீது கத்திக்குத்து சம்பவம் நடந்திருப்பதும், டாக்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.மருத்துவமனைகளில் டாக்டர்கள் பாதுகாப்பை உறுதி செய்யவும், தேவையின்றி வரும் நபர்களை தடுக்கவும் மாநில முழுவதும் அரசு மருத்துவமனைகளில், நோயாளிகளுடன் வரும் பார்வையாளர்களுக்கு 'டேக்' வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் 'டேக் முறை' உடனடியாக அமலுக்கு வந்து விட்டது. இதேபோல், கோவை அரசு மருத்துவமனையிலும் டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.இதுகுறித்து, டீன் நிர்மலா கூறியதாவது:கோவை அரசு மருத்துவமனையில், கடந்த ஆக., மாதம் பெண் டாக்டரிடம் ஒரு வாலிபர் அத்துமீற முயன்றார். அப்போதே, மருத்துவமனையில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட நிர்வாகம், மாநகர போலீசார், வருவாய்த்துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. 'சிசி டிவி' கேமராக்கள், தனியார் காவலர்கள், நுழைவாயில் மற்றும் வெளியேறும் பகுதிகள், வார்டுகளில் அடிப்படை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.அடையாள அட்டை இல்லாதவர்கள் கண்டறியப்பட்டால், உடனடியாக வெளியேற்றப்படுவர். பொதுப்பிரிவு வார்டுகளில் நோயாளிகளுடன் இரவு ஒருவர் தங்கிக் கொள்ளலாம். அவசர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டு இருந்தால், காத்திருப்பு பகுதியில் மட்டுமே இருக்க வேண்டும். இதன் வாயிலாக அடையாளம் தெரியாத நபர்கள் மருத்துவமனைக்குள் நுழைவது தடுக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை புறக்காவல் நிலைய கேமராவில் போலீசார் கண்காணிக்கின்றனர். போலீஸ் ரோந்தும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 'டேக் முறை' அமல்படுத்துவது குறித்து பரிசீலித்து வருகிறோம்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
இதாங்க பின்பற்றுகிறோம்
டீன் நிர்மலா மேலும் கூறுகையில், ''மருத்துவமனையில் அனுமதித்துள்ள நோயாளிகளின் உதவியாளருக்கு அடையாள அட்டை வழங்கப்படுகிறது. நோயாளிகளுக்கு உதவியாக இருவர் உடன் இருக்கலாம். அடையாள அட்டையில் நோயாளிகளுடன் இருப்பவர்களது பெயர் மற்றும் மொபைல் போன் எண் குறிப்பிடப்பட்டுள்ளது. காலை, 6:00 முதல், 8:00 வரை; மதியம், 1:00 முதல், 2:00 வரை; மாலை, 4:00 முதல், 6:00 வரை வெளியே சென்று வரலாம். ஒவ்வொரு முறையும் வெளியே சென்று வரும்போது, அடையாள அட்டை பரிசோதிக்கப்படும். மாலை, 4:00 முதல் 6:00 வரை மட்டுமே பார்வையாளர்களுக்கு அனுமதி. நோயாளிகளின் உதவியாளர்களுக்கு வழங்கிய அடையாள அட்டையை காண்பித்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர். மாலை, 6:00 மணிக்குபின், ஒவ்வொரு வார்டாக காவலாளிகள் ரோந்து செல்வர்,'' என்றார்.