வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரம்
பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில், வன விலங்குகளின் தாகம் தீர்க்க, வனப் பகுதியில் உள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணியை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சிறுத்தை, யானை, மான், கரடி, காட்டுமாடு, காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசிக்கின்றன.கோடையின் காரணமாக தற்போது, குளம், குட்டை, நீரோடைகளில் நீர் வரத்து குறைந்து வருகிறது. இதனால், யானை உள்ளிட்ட வனவிலங்குகள் மலையோர கிராமங்களுக்கு தண்ணீர் தேடி வருகின்றன. இதை தவிர்க்க வனவிலங்குகளுக்கு வனப்பகுதியில் கட்டப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகளில் நீர் நிரப்பப்பட்டு வருகிறது. இது குறித்து, பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலர் சரவணன் கூறுகையில், ''பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில், 21 இடங்களில் வனவிலங்குகளுக்கான தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.இவற்றில் வனவிலங்குகளுக்கு போதுமான தண்ணீர் இருக்கும்படி தொடர் கண்காணிப்பில் வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.சில இடங்களில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு, சோலார் சக்தியை கொண்டு மோட்டார் இயக்கி, தண்ணீர் நிரப்பப்படுகிறது. சில இடங்களில் வனத்துறை சார்பில் டிராக்டரில் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு தொட்டிகளில் நிரப்பப்படுகிறது.பழுதான தொட்டிகள் மற்றும் தண்ணீர் குழாய்களை சரி செய்ய தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன'' என்றார்.