வேவர்லிக்கு அரசு பஸ் இயக்க தொழிலாளர்கள் கோரிக்கை
வால்பாறை; வால்பாறையில் இருந்து, 20 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது வாட்டர்பால்ஸ் எஸ்டேட். இங்கிருந்து ஒரு கி.மீ., தொலைவில் உள்ள வேவர்லி டீ எஸ்டேட்டில், 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வசிக்கின்றனர். இவ்வழித்தடத்தில் இயக்கப்பட்ட அரசு பஸ்சை, மீண்டும் இயக்க வேண்டும் என, தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.தொழிலாளர்கள் கூறியதாவது:வேவர்லி எஸ்டேட் பகுதியிலிருந்து வால்பாறை, வாட்டர்பால்ஸ், அட்டகட்டி ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லுாரிகளில் மாணவர்கள் படிக்கின்றனர். பஸ் வசதி இல்லாததால் வன விலங்குகள் நடமாட்டம் மிகுந்த ரோட்டில் மாணவர்கள் நடந்து செல்ல வேண்டியுள்ளது.ரோடு சரியில்லை என்ற காரணத்தை கூறி, காலை, மாலையில் இயக்கப்பட்ட அரசு பஸ் திடீரென்று நிறுத்தப்பட்டது. தற்போது ஒரு கி.மீ., துாரம் உள்ள ரோடு, நகராட்சி சார்பில் தார் சாலையாக புதுப்பிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பஸ் இயக்கப்படவில்லை.பள்ளி, கல்லுாரி மாணவர்கள், தொழிலாளர்கள் நலன் கருதி, காலை, மாலை நேரங்களில் பஸ் இயக்க, கோவை கலெக்டர் உத்தரவிட வேண்டும். இவ்வாறு, கூறினர்.