உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இப்படி சொல்லீட்டீங்களே! கொரோனா காலத்துக்கு பின் பஸ் சேவை பாதிப்பு; காலிப்பணியிடங்கள் நிரப்பினால் இயல்பாகுமாம்

இப்படி சொல்லீட்டீங்களே! கொரோனா காலத்துக்கு பின் பஸ் சேவை பாதிப்பு; காலிப்பணியிடங்கள் நிரப்பினால் இயல்பாகுமாம்

கிணத்துக்கடவு ; கிணத்துக்கடவு வட்டாரத்தில் நிறுத்தப்பட்ட பஸ்களை மீண்டும் இயக்க வேண்டுமென, போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.கிணத்துக்கடவு மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் பலர், வேலைக்கு செல்லவும், மாணவர்கள் பள்ளி, கல்லூரி செல்லவும் பஸ் பயணத்தை நம்பியுள்ளனர்.தினமும் கிணத்துக்கடவு வழியாக மட்டும், மூன்றாயிரத்துக்கும் மேற்பட்டோர் பஸ் பயணம் மேற்கொள்கின்றனர்.கொரோனா காலத்தில், பஸ் போக்குவரத்து குறைக்கப்பட்டது. அதன்பின், அரசு அறிவுறுத்தலின் படி பஸ் போக்குவரத்து சிறிது சிறிதாக அதிகரிக்கத்துவங்கியது. ஒரு சில இடங்களில், பஸ் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இதனால் கிராமப்புற மக்கள் பலர் பாதிக்கப்பட்டனர்.இதில், கிணத்துக்கடவு - நெகமம் வழியாக செல்லும், 'கே 3' அரசு டவுன் பஸ், கொரோனாவுக்கு பின், காலை மற்றும் மாலை நேரங்களில் செல்வதில்லை. இதனால் பள்ளி மாணவர்கள் மற்றும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.கிணத்துக்கடவு - வேளந்தாவளம் வரை இயங்கி வந்த பஸ், கொரோனா பாதிப்பு காலத்தில் நிறுத்தப்பட்டது. அதன்பின், தற்போது வரை அந்த பஸ் இயக்கப்படவில்லை.இதனால், சொக்கனுார், பொட்டையாண்டிபுறம்பு மற்றும் வடபுதுார் பகுதியில் இருக்கும் மக்கள் பலர், பைக், ஆட்டோ மற்றும் 'கேப்' வசதியை பயன்படுத்தி வருகின்றனர்.மேலும், இந்த வழித்தடத்தில் அரசு பஸ் இயக்கி வந்தாலும், 'கே 2' என்ற பஸ் இயங்கிய நேரத்திற்கு பஸ் இல்லை.இதுமட்டும் இன்றி, பொள்ளாச்சியில் இருந்து குரும்பபாளையம், செங்குட்டைபாளையம் வழியாக நெகமம் செல்லும் அரசு பஸ், ஒரு சில நாட்கள் இரவு நேரத்தில் வருவதில்லை. இதற்கு மாற்றாக, இவ்வழித்தடத்தில் இரண்டு தனியார் பஸ்கள் சென்று வருகின்றன.விடுமுறை நாட்களில் இந்த பஸ்களும் இரவு நேரம் வருவதில்லை. இதனால் மக்கள் செய்வதறியாமல் உள்ளனர்.தற்போது, தனியார் நிறுவனங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகள் எண்ணிக்கை அதிகரிப்பால் கொரோனாவுக்கு முன் இருந்த நிலையை விட, மக்கள் போக்குவரத்து அதிகம் உள்ளது. ஆனால், கிணத்துக்கடவு வட்டாரத்தில் பல இடங்களில் இன்னும் பஸ் வசதியே இல்லை.பஸ் செல்லாத ஊர்களில் உள்ள மக்கள், தற்போது வரை பல கி.மீ., தூரம் நடந்து சென்றே பஸ் வசதி பெறுகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை. இதை போக்குவரத்து கழக அதிகாரிகள் களஆய்வு செய்து, மக்கள் நலன் கருதி, நிறுத்தப்பட்ட பஸ் சேவையை மீண்டும் துவங்க வேண்டும்.மேலும், ரயில்வே ஸ்டேஷன், பள்ளி, கல்லூரிகள் இருக்கும் வழித்தடங்களில் கூடுதல் பஸ் இயக்க வேண்டும், என, பஸ் பயணியர் வலியுறுத்துகின்றனர்.

நடவடிக்கை எடுப்பதாக உறுதி!

கோவை போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கொரோனாவுக்கு பின், பல இடங்களில் பஸ் சேவை பாதித்துள்ளது. இதை ஒவ்வொன்றாக சரி செய்து வருகிறோம். அதேபோன்று, பஸ் பயணியர் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. கிராம மக்கள், பைக் போன்ற வாகனங்களை அதிகம் பயன்படுத்த துவங்கி விட்டனர்.கிணத்துக்கடவு பகுதியில், 'கே 2' மற்றும் 'கே 3' பஸ் இயக்க ஆய்வு மேற்கொண்டு, இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷன் வழியாக பஸ் இயக்க வேண்டும் என கோரிக்கை இருந்தது. இந்த வழித்தடத்தில் பஸ் சென்று திரும்பும் அளவுக்கு ரோடு வசதி இல்லை. ரோடு குறுகலாக உள்ளது. பஸ் சென்று வர முறையான வசதி இருப்பின் நிச்சயம் பஸ் இயக்கப்படும்.மேலும், கிணத்துக்கடவு பகுதியில் பஸ் செல்லாத ஊர்களில் பஸ் இயக்கவும் ஏற்பாடு செய்யப்படும். தற்போது, டிரைவர் மற்றும் கண்டக்டர் பற்றாக்குறை உள்ளது. சிலர் ஓய்வு பெரும் நிலையில் உள்ளனர். காலி இடங்களை நிரப்பும் பட்சத்தில், நிச்சயம் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை