| ADDED : ஜூலை 11, 2011 11:10 PM
ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் அருகே படுமோசமான சாலையால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்ஸ்ரீமுஷ்ணத்தை அடுத்த குணமங்கலத்தில் இருந்து கூடலையாத்தூர் வழியாக சேத்தியாத்தோப்பு வரை செல்லும் சாலை உள்ளது. இச்சாலையில் விருத்தாசலத்தில் இருந்து குணமங்கலம், கூடலையாத்தூõர், சேத்தியாத்தோப்பு வழியாக சிதம்பரம் வரை அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. இதனால் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடைந்தனர்.
இந்நிலையில் இவ்வழியாகச் செல்லும் சாலையில் ஆனந்தகுடியில் இருந்து கூடலையாத்தூர் வரை உள்ள சாலை குண்டும் குழியுமாக இருந்ததால் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. குறிப்பாக குணமங்கலத்தில் இருந்து அம்புஜவல்லிப்பேட்டை வரை உள்ள 8 கி.மீ., தூர சாலை நடக்க கூட லாயக்கற்ற நிலையில் படு மோசமான நிலையில் இருப்பதால் இப்பகுதி பொதுமக்கள் சைக்கிளில் செல்ல கூட முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். சாலைகளில் பரவிக் கிடக்கும் கருங்கற்கள் இருசக்கர வாகனங்களின் டயர்களை பதம் பார்ப்பதால் பஞ்சர் ஆகி நடுவழியிலேயே பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இச்சாலையின் நிலை இப்படி என்றால் ஸ்ரீமுஷ்ணத்தில் இருந்த கள்ளிப்பாடி வரை உள்ள 4 கி.மீ., தூர சாலை கடந்த இரண்டு ஆண்டுகளாக மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். கிராமப்புற சாலைகளின் அவல நிலை தொடர்வதால் பூண்டி, கள்ளிப்பாடி, ஸ்ரீபுத்தூர், இணமங்கலம், அம்புஜவல்லிப்பேட்டை, காவனூர், மருங்கூர் உள்ளிட்ட வெள்ளாற்றங்கரையையொட்டி 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் உள்ள பாழாகிப்போன கிராமப்புற சாலைகளை சீரமைக்க உடனடி நடவடிக்ககை எடுக்க வேண்டும்.