| ADDED : ஜூலை 28, 2024 06:08 AM
பண்ருட்டி : பண்ருட்டியில் வாகன சோதனையில் சிக்கிய 7 கோடி ரூபாய் மதிப்புள்ள 12 கிலோ தங்க நகைகள், வணிகவரித் துறையிடம் நேற்று ஒப்படைக்கப் பட்டது.கடலூர் மாவட்டம், பண்ருட்டி போக்குவரத்து போலீசார் நேற்று முன்தினம், வி.கே.டி.தேசிய நெடுஞ்சாலை சித்திரைசாவடி அருகே வாகன சோதனை செய்தனர். அப்போது, சென்னை மார்க்கத்தில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்ற ஹூண்டாய் காரை நிறுத்தி சோதனை செய்தனர்.அதில், 2 பைகளில் 12 கிலோ தங்க நகைகள் இருந்தது. இதன் மதிப்பு 7 கோடி ரூபாய்.நகைக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் வாகனத்தில் இருந்த நபர்களிடம் விசாரணை நடத்தினர். அதில், மும்பையை தலைமையிடமாக கொண்டு சென்னையில் இயங்கிவரும் கோல்டு நிறுவனத்தின் தங்கம் எனவும், விற்பனை மாதிரிக்காக கொண்டு செல்வதாக கூறினர்.போக்குவரத்து போலீசார், அவரை பண்ருட்டி போலீசில் ஒப்படைத்தனர். டி.எஸ்.பி., பழனி உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, வணிகவரி, வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இருதுறை அதிகாரிகளும் சோதனை செய்தனர்.சென்னையில் இருந்து வருமான வரித்துறையினர் வந்து ஆய்வு செய்தனர். நேற்று மதியம் வணிக வரித்துறை இணை ஆணையர் சுபத்ரா தலைமையில் வந்த அதிகாரிகளிடம் நகைகள் ஒப்படைக்கப்பட்டது. தங்கம் தொடர்பான உரிய ஆவணங்கள் ஒப்படைக்கும் வரையில், தங்கத்தை கடலுார் கருவூலத்தில் வைத்தனர்.