இரு வீடுகளில் 31 சவரன் கொள்ளை
விருத்தாசலம்:கடலுார் மாவட்டம், விருத்தாசலம் பூதாமூர், பூந்தோட்டம் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல். நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டி, விருத்தாசலம் கோவில்களில் நடந்த சிவராத்திரி விழாவிற்கு குடும்பத்துடன் சென்றார்.நேற்று விடியற்காலை வீட்டிற்கு வந்தபோது, கதவு பூட்டு உடைந்திருந்தது. அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைத்து, அதில் இருந்த 25 சவரன் நகை, 1 லட்சம் ரூபாய் பணம் திருடு போயிருந்தது.அதேபோல், சிவராத்திரி விழாவிற்கு சென்ற, அருகில் வசிக்கும் சுமதி வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்த 6 சவரன் நகை, 50,000 ரூபாய் பணத்தை திருடிச் சென்று உள்ளனர். விருத்தாசலம் போலீசார் திருடர்களை தேடி வருகின்றனர்.