பட்டுப்போகும் கத்தரிச்செடிகள்; அதிகாரிகள் ஆய்வு செய்ய கோரிக்கை
கடலுார்; வெள்ளம் பாதித்த பகுதிகளில் கத்தரி செடி பட்டுப்போய் விடுவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.பெஞ்சல் புயல் காரணமாக கடலுார் சுற்றுப்பகுதியில் கனமழை கொட்டியது. இதனால் தென்பெண்ணையாறு, கெடிலம் ஆகிய ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக தடுப்பு அணை உடைந்து கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதில் பல ஏக்கர் நிலத்தில் மணல் மேடிட்டும், பல ஏக்கர் நிலத்தில் பள்ளமாகவும் மாற்றிவிட்டது.கடலுார் அருகே உள்ள நாணமேடு, கண்டக்காடு, உச்சிமேடு, பெரிய கங்கணாங்குப்பம், உப்பலவாடி போன்ற பகுதிகளில் அதிகளவு கத்தரி உள்ளிட்ட காய்கறி செடி பயிர் செய்யப்படுகிறது. அவ்வாறு நடவு செய்த கத்திரி செடிகள் 20 நாட்களுக்கு பிறகு படிப்படியாக பட்டுப்போய்விடுகின்றன. இதனால் நிலத்தில் கத்தரி செடி அடர்த்தி குறைந்து வருகிறது. வெற்றிடத்தில் களைகள் அதிகளவில் முளைத்து விவசாயத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தி வரும் நிலை உள்ளது. எனவே கத்தரிச்செடி 20நாட்களுக்கு பிறகு பட்டுப்போவதற்கு காரணம் என்ன, என்பதை அதிகாரிகள் கண்டறிந்து அவற்றிக்கான தீர்வை அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.