உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விருத்தாசலம் நகரில் ஆக்கிரமிப்பு: பிரதான சாலைகளில் கடும் நெரிசல்

விருத்தாசலம் நகரில் ஆக்கிரமிப்பு: பிரதான சாலைகளில் கடும் நெரிசல்

விருத்தாசலம்: விருத்தாசலம் நகரில் ஆக்கிரமிப்பு காரணமாக ஏற்படும் போக்குவரத்து பாதிப்பை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.கடலுார் - திருச்சி, சிதம்பரம் - சேலம், சென்னை - ஜெயங்கொண்டம் மார்க்கத்தில், விருத்தாசலம் முக்கிய சந்திப்பு. அரசு மற்றும் தனியார் பஸ், கார், வேன் மட்டுமின்றி கடலுார் துறைமுகம், நெய்வேலி என்.எல்.சி., நிறுவனம், தனியார் சிமென்ட் நிறுவனங்கள், சர்க்கரை ஆலைகள், சேலம் இரும்பு உருக்காலை போன்ற பெரு நிறுவனங்களுக்கு கனரக வாகனங்கள் செல்கின்றன.அதிக வாகன போக்குவரத்து காரணமாக, விருத்தாசலம் வழியாக கடலுார்-சேலம் (சி.வி.எஸ்., சாலை) தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட்டு, 300 கோடி ரூபாயில் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதேப் போன்று, விருத்தாசலம்-உளுந்துார்பேட்டை இடையே 22 கி.மீ., சாலை, 136 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட்டது.மேலும், நகரின் பிரதான ஜங்ஷன் சாலை, பெண்ணாடம் ரோடு, தென்கோட்டை வீதி உள்ளிட்ட சாலைகள் அனைத்தும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறையின் சிறப்பு திட்டங்கள் மூலம் பிளாட்பார்ம் வசதியுடன் அகலப்படுத்தப்பட்டன.ஆனால், இந்த சாலைகளில் ஆக்கிரமிப்பு காரணமாக எதிரெதிர் திசைகளில் வாகனங்கள் சென்று வர முடியவில்லை. குறிப்பாக, கடைகளின் முகப்பு ெஷட், விளம்பர பலகைகள், ராட்சத டிஜிட்டல் பேனர்கள் வைத்துள்ளதால் வாடிக்கையாளர்களின் வாகனங்கள் சாலையின் குறுக்கே நிறுத்தப்படுகின்றன. பெருவணிக நிறுவனங்களுக்கு வரும் லோடு வாகனங்கள், வாடிக்கையாளர்களின் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதால் பிரதான சாலைகளில் நெரிசல் ஏற்படுகிறது. இதனை சுட்டிக்காட்டி, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியாகும் போது, நகராட்சி, நெடுஞ்சாலைத்துறை மற்றும் போலீசார் இணைந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபடுவர். அப்போது, தாமாகவே ஆக்கிரமிப்பை அகற்றி விடுவர். ஓரிரு நாட்களில் மீண்டும் ஆக்கிரமிப்பு முளைப்பது தொடர்கிறது. எனவே, வர்த்தக சங்க பிரதிநிதிகளுடன் போலீசார் கலந்தாலோசித்து, வாகன நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும்.

டாஸ்மாக் கடைகள்

அகற்ற வேண்டும் விருத்தாசலம் நகரில் பிரதான ஜங்ஷன் சாலை, கடலுார் சாலையில் அரசு மற்றும் தனியார் மதுபான கூடங்கள் என 10க்கும் மேற்பட்டவை உள்ளன. இங்கிருந்து போதை தலைக்கேறிய மதுப்பிரியர்கள், அதிவேகமாக வாகனங்களை ஓட்டிச் செல்லும் போது விபத்து ஏற்படுகிறது. எனவே, டாஸ்மாக் கடைகளை அப்புறப்படுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !