கள்ளிப்பாடி -காவனூர் வெள்ளாற்று மேம்பாலம் கட்டும் பணி விறுவிறு
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அருகே கள்ளிப்பாடி - காவனூர் வெள்ளாற்றின் குறுக்கே பாலம் கட்டுமான பணிகள் துவங்கி நடந்து வருவதால் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.ஸ்ரீமுஷ்ணம் அருகே கள்ளிப்பாடி- காவனூர் வெள்ளாற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டி தர வலியுறுத்தி கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வெள்ளாற்றின் இருபுறமும் உள்ள 20 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கோரிக்கை விடுத்துவந்தனர்.இந்நிலையில் கடந்த பிப்., மாதம், 27 கோடியே 18லட்சம் ரூபாய் செலவில் உயர் மட்ட மேம்பாலம் கட்டும் பணிகள் துவங்கப்பட்டது.தற்போது இந்த பாலப்பணிகள் விறுவிறுப்பாக நடந்துவருவதால் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.பாலம் கட்டும் பணி முடிவடையும் நிலையில் ஸ்ரீமுஷ்ணத்தின் வடக்குப்பகுதியில் உள்ள 10 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஸ்ரீமுஷ்ணத்திற்கு வந்து செல்வதில் சிரமம் ஏதும் இருக்காது.பாலம் கட்டுமான பணிகளை அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதால் தற்போது பில்லர்கள் அமைக்கும் பணிவிறுவிறுப்பாக நடந்து வருகிறது.