பள்ளி மேற்கூரை இடிந்து 3 மாணவர்கள் படுகாயம்
விருத்தாசலம்: விருத்தாசலத்தில், தனியார் பள்ளியின் மேற்கூரை இடிந்து மூன்று மாணவர்கள் படுகாயமடைந்தனர். கடலுார் மாவட்டம், விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் தனியார் பள்ளியில் நேற்று மாலை, ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் வகுப்பறையில் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில், மூன்று மாணவர்கள் படுகாயமடைந்தனர். அவர்களை பள்ளி நிர்வாகத்தினர் மீட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அதில், ஒரு மாணவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மற்ற இரண்டு மாணவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. விருத்தாசலம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதே பள்ளியில் இதற்கு முன் இரண்டு முறை மேற்கூரை இடிந்து விழுந்துள்ளதாக பெற்றோர் தெரிவித்தனர்.