மேலும் செய்திகள்
மிளகாய் பொடி துாவி நகை பறித்தவர் கைது
20-Nov-2024
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே அரசு பஸ்சில் எடுத்து வந்த 52 சவரன் நகைகளை மர்ம நபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடலுார் மாவட்டம், விருத்தாசலம் ராஜவேல் வீதி காய்கறி மார்க்கெட் எதிரே செந்தில் ஜுவல்லரி நகைக்கடை உள்ளது. இங்கு விருத்தாசலம் அடுத்த இருப்புக்குறிச்சியை சேர்ந்த ஜான், 45, என்பவர் பணிபுரிகிறார். இவர், நேற்று மதியம் நகை கடையில் இருந்து 52 சவரன் நகைகளை எடுத்துக் கொண்டு, பெண்ணாடத்தில் இயங்கும் தனியார் ஹால்மார்க் சீல் போடும் மையத்திற்கு பஸ்சில் சென்றார்.மாலை 4:00 மணியளவில், ஹால்மார்க் சீல் போட்ட நகைகளுடன், திருச்சி - புதுச்சேரி அரசு பஸ்சில் வந்தார். கருவேப்பிலங்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் பஸ் நின்றபோது, ஜான் அருகில் அமர்ந்திருந்த மர்ம நபர், மின்னல் வேகத்தில் அவரிடம் இருந்த நகைப்பையை பறித்துக் கொண்டு, முன்புற படி வழியாக இறங்கி ஓடினார். அவருடன், பின்பற படியில் இருந்து மற்றொரு நபரும் ஓடினார்.நகையை பறிகொடுத்த ஜான் கூச்சல் எழுப்பியபடி பஸ்சிலிருந்து இறங்கி பார்த்தபோது, ஒரு பைக்கில் தயாராக இருந்த மற்றொரு நபருடன் இருவரும் ஏறி தப்பிச் சென்றனர்.தகவலறிந்த ஜூவல்லரி உரிமையாளர் தியாகராஜன் கருவேப்பிலங்குறிச்சி போலீசில் புகார் கொடுத்தார். டி.எஸ்.பி., மோகன், இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் அங்குள்ள சி.சி.டி.வி., கேமரா பதிவை கைப்பற்றி ஆய்வு செய்தனர். 35 லட்சம் ரூபாய் மதிப்பிலான 52 சவரன் நகையை பறித்துச் சென்ற நபர்கள் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இச்சம்பவம் நடந்த அரசு பஸ் கண்டக்டரிடம் போலீசார் விசாரித்தபோது, 'பையை பறித்துக்கொண்டு ஓடிய நபர், பெண்ணாடம் பஸ் நிறுத்தத்தில் மற்றொரு நபருடன் ஏறினார். முருகன்குடி பஸ் நிறுத்தத்தில் பஸ் நிற்குமா என கேட்டனர். நிற்காது என்றதும், யாருக்கோ போன் செய்து, கருவேப்பிலங்குறிச்சியில் தான் நிற்கும் என கூறினர்' என தெரிவித்தார். இதன் மூலம் பெண்ணாடம் ஹால்மார்க் மையத்தில் இருந்து ஜான் புறப்பட்ட போது அவரை பின்தொடர்ந்து வந்து, நகைப் பையை திருடிச் சென்றது உறுதியானது
20-Nov-2024