கடலுாரில் பேனர் அகற்ற எதிர்ப்பு போலீசாரிடம் அ.தி.மு.க., வாக்குவதாதம்
கடலுார்: கடலுாரில் அ.தி.மு.க., பேனர்கள், கட்சிக்கொடிகளை போலீசார் அகற்றியதால் அக்கட்சியினர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கடலுார் மாவட்டத்தில் நாளை 12ம் தேதி அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி சுற்றுப்பயணம் செய்கிறார். இதனை முன்னிட்டு கடலுார் வடக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில், அவருக்கு வரவேற்பு அளிக்கும் விதமாக சாலையோரத்தில் பேனர்கள், கட்சிக்கொடிகள் வைக்கும் பணியில் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நேற்று காலை வழக்கம் போல் டவுன்ஹால் சாலையோரத்தில் அ.தி.மு.க., பேனர்கள் வைக்கும் பணிகள் நடந்தது. அப்போது, பேனர்களை கடலுார் புதுநகர் போலீசார் அதிரடியாக அகற்றினர். இதனையறிந்த பகுதி செயலாளர் வெங்கட்ராமன், வட்ட பிரதிநிதி நாகராஜன், செந்தில்முருகன் மற்றும் நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு திரண்டு வந்தனர். தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் பல நாட்கள் பேனர் வைத்திருக்கும் போது, அ.தி.மு.க., பேனரை மட்டும் அகற்றுவது சரியா என சரமாரியாக கேள்வி கேட்டு, போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. உடன், போலீசார், அ.தி.மு.க., வினரை சமாதானம் செய்து, போலீஸ் ஸ்டேஷனுக்கு வருமாறு கூறி சென்றனர்.