எம்.புதுாரில் மீண்டும் பஸ் நிலைய பணி துவக்கம்: இரும்பு வேலி அமைக்கும் பணி தீவிரம்
கடலுார்: கடலுார் புதிய பஸ் நிலையம், கேப்பர் மலையில் உள்ள எம்.புதுாரில் மீண்டும் அமைக்கும் பணி துவங்கி நடந்து வருகிறது. கடலுார் நகரம், புதுச்சேரி மாநிலத்தை யொட்டி அமைந்துள்ளதால் சராசரியாக தினமும் 60 ஆயிரம் பயணிகள் வந்து செல்கின்றனர். பஸ் நிலையத்திற்குள் தினசரி 650 பஸ்கள் வந்து செல்கின்றன. பஸ் நிலையம் அருகே வணிக நிறுவனங்கள், ரயில் நிலையம் அருகருகே அமைந்திருப்பதால் பஸ்கள் உள்ளே செல்வதற்கும், வெளியே செல்வதற்கும் கடினமாக உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.கடலுார் லாரன்ஸ் ரோட்டில் இயங்கி வரும் பஸ் நிலையம், போதியளவு இட வசதி இல்லாததால் கடந்த அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் பஸ் நிலையத்தை கலெக்டர் அலுவலகம் அருகே அமைக்க இடம் ஒதுக்கப்பட்டு துவக்க விழாவும் நடந்தது. அதனைத் தொடர்ந்து, ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தில் தி.மு.க., பொறுப்பேற்றது. அ.தி.மு.க., தேர்வு செய்த இடத்தில் பஸ் நிலையம் அமைப்பதா என்கிற நிலை ஏற்பட்டது. தமிழகத்தில் தி.மு.க., பதவியேற்ற பிறகு கடலுார் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. பஸ் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என தெரிவித்து வல்லுனர்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அவர்கள் கடலுார் கரும்பு ஆராய்ச்சி பண்ணை, பாதிரிக்குப்பம், குமாரப்பேட்டை, எம்.புதுார், ஆகிய பகுதிகளில் புதிய பஸ் நிலையம் அமைந்தால் பொதுமக்களுக்கு வசதியாக இருக்கும் என பரிந்துரை செய்தனர். இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. முன்னாள் அமைச்சர் சம்பத் உள்பட பல்வேறு அமைப்பினரும் போராட்டம் நடத்தினர். ஏற்கனவே கலெக்டர் அலுவலகம் அருகே பஸ் நிலையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில் தி.மு.க., கூட்டணியில் உள்ள மா.கம்யூ.,-வி.சி., மற்றும் நகர் நலச்சங்கங்கள் புதிய பஸ் நிலையம் எம்.புதுாரில் துவங்குவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் கடந்த ஒரு 2 வாரம் முன்பு எம்.புதுாரில் பஸ் நிலையம் அமைப்பதற்கான பணிகள் முழு வீச்சில் துவங்கியுள்ளது. அங்கே இருந்த மரங்கள் அகற்றப்பட்டன. கட்டடம் எழுப்புவதற்கு மண் பரிசோதனை முடிவடைந்தது. அதைத்தொடர்ந்து சுற்றுச்சுவருக்கு பதிலாக இரும்பு தகடு கொண்டு வேலி அமைக்கப்பட்டு வருகிறது. விரைவில் கட்டடம் கட்டும் பணி துவங்கும் என கூறப்படுகிறது.