மெக்கானிக்கை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
வடலுார்; மெக்கானிக்கை தாக்கிய, 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். வடலுார் அடுத்த ராசாக்குப்பத்தைச் சேர்ந்தவர் அருண்பிரசாத், 28; வடலுாரில் மொபைல் போன் பழுது பார்ப்பு கடை நடத்தி வருகிறார். இவர், மேலப்புதுப்பேட்டை சுப்ரியா, 26; என்பவரை கடந்தாண்டு திருமணம் செய்தார். தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில், திருமணத்தின் போது சீதனமாக அளித்த பைக்கை, பைனான்ஸ் நிறுவனம் மூலம் பறிமுதல் செய்ய சுப்ரியாவின் சகோதரர் சுகுமாறன் மற்றும் அவரது தரப்பினர் நேற்று முன்தினம் அருண்பிரசாத் கடைக்கு சென்றனர். அங்கு அருண்பிரசாத்தை தாக்கி மிரட்டல் விடுத்தனர். இதில், காயமடைந்த அவர் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். புகாரின் பேரில், சுகுமாறன், கதிர், முருகன், அருள் ஆகியோர் மீது வழக்குப் பதிந்து வருகின்றனர்.