கடலுார் கஸ்டம்ஸ் சாலை இருவழிப்பாதையாக மாற்றம்:ரூ.50 கோடி செலவில் புதுப்பொலிவு பெறுகிறது
கடலுார்: கடலுார் ஆல்பேட்டையில் இருந்து கண்டரக்கோட்டை மேம்பாலம் வரை செல்லும் பழைய கஸ்டம்ஸ் சாலை ரூ. 50 கோடி மதிப்பில் இருவழி சாலையாக மாற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடலுாரில் இருந்து மாளிகைமேடு வழியாக விழுப்புரம் செல்லும் வழித்தடத்தில் வாகனப் போக்குவரத்து அதிகரித்துள்ளது. மேலும், 50 கி.மீ., துாரம் உள்ளதால் பயண நேரமும் 1:30 மணி நேரமாகிறது. வழியில் உள்ள நெல்லிக்குப்பம், பட்டாம்பாக்கம் ஆகிய நகரங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் போக்குவரத்து நெரிசல் காரணமாக பயண நேரம் மேலும் அதிகரிக்கிறது. அதனால் பஸ் பயண நேரத்தை குறைப்பதற்கும், போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிப்பதற்கும், 10 கி.மீ., குறைவாக பழைய கஸ்டம்ஸ் சாலை சீரமைக்க கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் ஊராட்சி நிதியில், அந்தந்த எல்லைப்பகுதியில் உள்ள பகுதியில் மண்சாலை போடப்பட்டது. இதன் காரணமாக கடலுார் ஆல்பேட்டை பெண்ணையாற்று கரையில் துவங்கி பண்ருட்டி வி.கே.டி., சாலையில் உள்ள கண்டரக்கோட்டை பாலம் அருகே இணையும் இடம் வரை ஊராட்சி நிதியில் சாலை அமைக்கப்பட்டது. பின்னர் மண் சாலையை முதற்கட்டமாக குண்டு சாலையில் இருந்து சொர்ணாவூர் பாலம் வரை ரூ. 16 கோடி செலவில் தார் சாலை அமைக்கப்பட்டது. சொர்ணாவூரில் இருந்து கண்டரக்கோட்டை வரை உள்ள சாலை அமைக்க நிலம் கையகப்படுத்த வேண்டியிருந்ததால், கஸ்டம்ஸ் சாலை பட்டாம்பாக்கம் அருகே செல்லும் சொர்ணாவூர் பாலத்தோடு இணைக்கப்பட்டது. இந்த சாலை, கடந்த 2025ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் நத்தப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் இருந்த கல்வெட்டு பாலம் இடிந்து உள்வாங்கியது. அதனைத் தொடர்ந்து இச்சாலையை இருவழிச்சாலையை சீரமைக்க முன்னாள் முதல்வர் ஸ்டாலின் ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார். தற்போது சாலைப்பணி துவங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதில், குண்டுசாலையில் இருந்து புறவழிச்சாலை வரை சிமெண்ட் சாலையும், அதைத்தொடர்ந்து மேல்பட்டாம்பாக்கம் வரை இருவழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. அத்துடன், பெண்ணையாற்றின் தெற்கு கரையும் அகல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இந்த சாலை பிரம்மாண்டமான சாலையாக காட்சி தருகிறது. இந்த சாலை அமைத்த கையோடு சொர்ணாவூர் பாலத்தில் இருந்து கண்டரக்கோட்டை வரை செல்லும் சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணியையும் துவங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.