வெள்ளம் பாதித்த பகுதிகளில் இதுவரை 26,247 பேருக்கு சிகிச்சை கலெக்டர் தகவல்
கடலுார் : கடலுார் மற்றும் பண்ருட்டியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு 26 ஆயிரத்து 247 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.அவரது செய்திக்குறிப்பு:கடலுார் மற்றும் பண்ருட்டி தாலுகாவில் வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு நோய் தொற்று பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 1ம் தேதி முதல், நேற்று முன்தினம் வரை 406 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டது. இதில், 26 ஆயிரத்து 247 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.கால்நடைத்துறை மூலம் 30ம் தேதி முதல், நேற்று முன்தினம் வரை 175 முகாம் நடத்தப்பட்டு 37 ஆயிரத்து 50 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.கடலுார் வட்டார பகுதிகள், மாநகராட்சி பகுதிகள், அண்ணா கிராமம் வட்டாரம், நெல்லிக்குப்பம் நகராட்சி, பண்ருட்டி வட்டாரத்தில் திருவாமூர், ஏரிப்பாளையம், கொளப்பாக்கம், சிறுகிராமம் ஆகிய பகுதிகளிலும் பொதுமக்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடக்கிறது.கடலுார் அடுத்த பள்ளிப்பட்டு, திருப்பணாம்பாக்கம், நாணமேடு, நத்தப்பட்டு, வரக்கால்பட்டு, பில்லாலி ஆகிய பகுதிகளிலும், அண்ணாகிராமம் வட்டாரத்தில் கீழ்கவரப்பட்டு, சித்தரசூர், கீழ் அருங்குணம், கள்ளிப்பட்டு ஆகிய பகுதிகளில் கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடக்கிறது.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.