பெண்ணை திருமணம் செய்ய மறுப்பு கடலுார் போலீஸ்காரர் கைது
கடலுார் : திருநெல்வேலி இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய கடலுார் போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார். கடலுார் மாவட்டம், கடலுார் அடுத்த சேடப்பாளையம், நாகம்மாள்பேட்டை அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் சம்பத் 28; உளுந்துார்பேட்டையில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் காவலராக உள்ளார். கடந்த ஆண்டு திருநெல்வேலி கலெக்டர் அலுவலகத்தில் சம்பத், சக போலீசாருடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது, அலுவலக பணியில் இருந்த 28 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. சம்பத் பணி முடிந்து ஊருக்கு திரும்பிய பிறகும், காதலர்களாக பழகினர். சம்பத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த பெண்ணை கடந்த டிச., மாதம் கடலுார் அழைத்து வந்து லாட்ஜில் தங்க வைத்து நெருங்கி பழகினார். அதன்பிறகு திருமணம் செய்ய மறுத்து திட்டினார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி., ஜெயக்குமாரிடம், புகார் மனு அளித்தார். அதன்பேரில் கடலுார் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் தீபா வழக்குப் பதிந்து சம்பத்தை கைது செய்து, கடலுார் மத்திய சிறையில் அடைத்தார்.