தீவிர திருத்த பணிக்கான விண்ணப்ப வினியோகம்... துவங்கியது; வரைவு வாக்காளர் பட்டியல் டிச., 9ம் தேதி வெளியீடு
கடலுார்: மாவட்டத்திலுள்ள 9 சட்டசபை தொகுதிளிலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி துவங்கியது. வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள், முகவரி மாறியவர்களின் பெயர்கள், தொடர்ந்து இடம் பெற்று வருகின்றன. பல வாக்காளர்களின் பெயர்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளிலும் இடம் பெற்றுள்ளன. அதனால், தகுதியான வாக்காளர்களை மட்டுமே பட்டியலில் இடம் பெற செய்ய வேண்டும்; போலி வாக்காளர்களை நீக்க வேண்டும்; என்ற நோக்கத்திற்காக, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை மேற்கொள்ள, தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அதன்படி, கடலுார் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி பல்வேறு கட்டங்களாக வரும், பிப்., 7ம் தேதி வரை நடக்கிறது. மாவட்டத்தில் உள்ள 9 சட்டசபை தொகுதிகளிலும் கடந்த, 27 ம் தேதி நிலைப்படி, 21,93,577 வாக்காளர்கள் உள்ளனர். நேற்று துவங்கி வரும் டிச.,4 ம் தேதி வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியாக ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களால் கணக்கெடுப்பு படிவம் வீடு வீடாக வாக்காளர்களுக்கு அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் வழங்கப்பட்டு வருகிறது. ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் மூலம் வாக்காளர்கள் ஒவ்வொருவருக்கும் 2 படிவங்கள் வழங்கப்படும். இந்த படிவங்களை பூர்த்தி செய்வதற்கு ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் உதவிபுரிவார்கள். வாக்காளர்கள் முழுமையாக பூர்த்தி செய்து கையொப்பமிட்டு இரண்டு படிவங்களில் ஒன்றினை மட்டும் அலுவலர்களிடம் சமர்ப்பித்திட வேண்டும். அவ்வப்போது ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்கள் இல்லத்திற்கு நேரில் வரும் போது வாக்காளர் இல்லாத பட்சத்தில் அவரது குடும்ப உறுப்பினர்கள் அல்லது உறவினர்களிடம் படிவத்தினை முறையாக பூர்த்தி செய்து கையொப்பமிட்டு வழங்கலாம். அவ்வாறு பெறப்படும் படிவங்களில் உள்ள வாக்காளர்களின் பெயர்கள் மட்டுமே வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும். தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியல் டிச.,9ம் தேதியும், இறுதி வாக்காளர் பட்டியல் பிப்.,7ம் தேதியும் வெளியிடப்பட உள்ளன. கடந்த, 2002 மற்றும் 2005ம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல்கள், கணக்கெடுப்பு பணிக்கு பயன்படுத்தப்படவுள்ளன. இந் த பட்டியல்கள் அலுவலர்களிடம் உள்ளன. இது குறித்து கலெக்டர் அலுவலக அதிகாரிகள் கூறியதாவது: எந்தெந்த வீடுகளில் கடந்த, 2002 மற்றும் 2005ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதோ, அந்த வீடுகளுக்கு மட்டுமே செல்வர். அந்த வீடுகளில் யாராவது இருந்தால், அவர்களின் விவரத்தை கேட்டு, வாக்காளர் கணக்கெடுப்பு படிவத்தை வழங்குவர். அந்த வீட்டில், 18 வயது நிரம்பியவர்கள் இருந்தால், அதற்குரிய விண்ணப்ப படிவம் மற்றும் உறுதிமொழி படிவத்தையும் வழங்குவர். அவற்றை உடனடியாக பூர்த்தி செய்து தர வேண்டியது இல்லை. அடுத்த முறை ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வரும் போது, ஆவணங்களுடன் அவற்றை சமர்ப்பித்தால் போதும். கடந்த 2002 மற்றும் 2005ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், தங்களது பெற்றோர், தாத்தா, பாட்டி பெயர்கள் இருந்தால், அதை தெரிவிக்க வேண்டும். உரிய ஆவணங்களை காட்டி, டிச.,9ம் தேதி வெளியாகும் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
அரசியல் கட்சிகள் எதிர்ப்பு
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அரசியல் கட்சிகளின் கூட்டத்தில், எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை ஒத்தி வைக்க வேண்டும் என, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.