விருத்தாசலம்:மாநில மாநாட்டில் சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்' என பிரேமலதா கூறினார். கடலுார் மாவட்டம், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் தே.மு.தி.க., பொதுச் செயலாளர் பிரேமலதா, மாநில பொருளாளர் சுதீஷ் ஆகியோர் நேற்று காலை 11:00 மணிக்கு சுவாமி தரிசனம் செய்தனர். அப்போது, பிரேமலதா நிருபர்களிடம் கூறியதாவது: 'உள்ளம் தேடி இல்லம் நாடி' மற்றும் 'மக்களை தேடி மக்கள் தலைவர்' என்ற இலங்கை வாழ் தமிழர்களால் வழங்கப்பட்ட ரத யாத்திரை மூலம் தமிழகம் முழுவதும் மக்களை சந்தித்து வருகிறேன். மக்களிடம் பெரும் ஆரவாரம் தெரிகிறது. நாளை (இன்று) கேப்டன் பிரபாகரன் படம் ரீ-ரிலீஸ் செய்வதால், தொண்டர்களுடன் பார்க்க இருக்கிறேன். நாளை (இன்று) மாலை விழுப்புரம், செங்கல்பட்டு என முதற்கட்ட ரத யாத்திரை பயணம் முடிந்ததும், 24, 25ம் தேதிகளில் விஜயகாந்த் பிறந்த நாள் ஏற்பாடுகள் தலைமை கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விஜயகாந்திற்கும், கட்சிக்கும் முதல் வெற்றி கொடுத்த தொகுதி, விருத்தாசலம். இங்கு ஒன்றரை மாதம் தங்கியிருந்து கட்சிப் பணிகள் செய்துள்ளேன். இன்னும் சட்டசபை கூட்டணி முடிவாகவில்லை. எத்தனை தொகுதிகள் கிடைக்கிறது என தெரியனும். அதன் பின்னரே யார் வேட்பாளர்கள் என தெரியவரும். கடலுாருக்கும், திட்டக்குடிக்கும் இடையே ஜனவரி 9ம் தேதி மாநில மாநாடு நடக்கிறது. கூட்டணி குறித்து மாநாட்டில் அறிவிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.
விருத்தாசலத்தில் போட்டி உறுதி?
ஜனவரி 9ம் தேதி, கடலுார் மாவடட்டம் வேப்பூரில், தே.மு.தி.க., மாநில மாநாடு நடக்கிறது. இதனால், விருத்தாசலம் தொகுதியில் பிரேமலதா போட்டியிடுவது 90 சதவீதம் உறுதியாகி விட்டதாக, அக்கட்சியினர் கூறுகின்றனர். அவரது கையில், 1 அடி நீளத்தில் கருப்பு நிறத்தில் ஒரு கோல் வைத்திருந்தார். இது குறித்து அவரிடம் கேட்டபோது, நண்பர் பரிசாக கொடுத்தது என்றார். ஆனால், கருங்காலி கோல் என்றும், அரசியலில் வெற்றிப் பாதையை நோக்கிச் செல்ல சிறப்பு பூஜை செய்யப்பட்டது எனவும் அக்கட்சியினர் தெரிவித்தனர்.