உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பணம் பட்டுவாடா செய்வதில் தாமதம் மார்க்கெட் கமிட்டியில் விவசாயிகள் மறியல்

பணம் பட்டுவாடா செய்வதில் தாமதம் மார்க்கெட் கமிட்டியில் விவசாயிகள் மறியல்

சேத்தியாத்தோப்பு:சேத்தியாத்தோப்பு அடுத்த மிராளூர் மார்கெட் கமிட்டியில் பருத்தி விற்பனை செய்ய வந்த விவசாயிகள் நிலுவைத் தொகை வழங்க வேண்டும் என திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேத்தியாத்தோப்பு அடுத்த மிராளூர் மார்க்கெட் கமிட்டியில் கடந்த மாதம் 18 ஆம் தேதி முதல் பருத்தி மறைமுக ஏலம் துவங்கி நடந்து வருகிறது. மார்க்கெட் கமிட்டியில், புவனகிரி, கீரப்பாளையம், சேத்தியாத்தோப்பு, ஸ்ரீமுஷ்ணம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து விவசாயிகள் அறுவடை செய்த பருத்தியை மறைமுக ஏலத்தில் விற்பனை செய்து வருகின்றனர். கடந்த காலங்களில் வியாபாரிகள் கொள்முதல் செய்யும் பருத்திக்கான மொத்த பணத்தை அதிகாரிகள் மூலம் விவசாயிகளுக்கு நேரடியாக பட்டுவாடா செய்யப்பட்டது. இந்தாண்டு ஈநாம் முறையில் வியாபாரிகள் கொள்முதல் செய்யும் பருத்திக்கான தொகையை விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என்ற முறை அமல்படுத்தப்பட்டது. இதில் நெட்வொர்க், சர்வர் பிரச்னையால் கடந்த ஒருவாரமாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படாததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் 50க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை 5.00 மணியளவில் விருத்தாசலம்-புவனகிரி சாலையில் மார்க்கெட் கமிட்டி அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சேத்தியாத்தோப்பு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர். இதனால் விருத்தாசலம் - புவனகிரி சாலையில் போக்குவரத்து பாதித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !