வனத்துறை எச்சரிக்கை பலகை சேதம்; அதிகாரிகள் நடவடிக்கை தேவை
சிறுபாக்கம்;வேப்பூர் அருகே வனத்துறை எச்சரிக்கை பலகை சேதமடைந்து, புதர்மண்டி காணப்படுகிறது. வேப்பூர் அருகே வனத்துறைக்கு சொந்தமாக ஆயிரம் ஏக்கர் பரப்பளவிற்கு மேல் காப்புகாடுகள் உள்ளன. இந்த காப்புகாடு சேலம் - விருத்தாசலம் தேசிய நெடுஞ்சாலையில், வேப்பூரில் இருந்து பெரியநெசலுார், அடரி, சிறுபாக்கம் வழியாக நைனார்பாளையம் வரை உள்ளது. இச்சாலையையொட்டி, இருபுறமும் அமைந்துள்ள காப்புக்காடுகளில் மான், மயில், காட்டுப் பன்றிகள் அதிகளவில் உள்ளன. இங்கு வசிக்கும் விலங்கு கள், தண்ணீர் மற்றும் உணவு தேவைக்காக வனத்திலிருந்து வெளியேறி சாலையின் ஒரு புறத்தில் இருந்து மறுபுறம் செல்ல சாலையை கடக்கின்றன. அப்போது அவ்வழியே சாலையில் வேகமாக செல்லும் வாகனங்களில் சிக்கி உயிரிழப்பது வாடிக்கையாக உள்ளன. மேலும், சாலையோரங்களில் நிற்கும் குரங்கு உள்ளிட்ட விலங்குகளுக்கு வாகனங்களில் செல்லும் பயணிகள் பழங்கள், காய்கறிகள் மற்றும் உணவுகளை வீசி செல்கின்றனர். இதனால் விலங்குகள் வாகனங்களில் சிக்கி உயிரிழக்கின்றன. இதனை தடுக்க மாவட்ட வனத்துறை சார் பில், பயணிகளை எச்சரிக்கும் வகையில், பெரியநெசலுார் மற்றும் அரசங்குடியில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டது. அதில், பெரியநெசலுாரில் வைக்கப்பட்ட எச்சரிக்கை பலகை பராமரிப்பின்றி, சேதமடைந்து, புதர்மண்டி காணப்படுகிறது. இதனால், வாகனங்களில் வன விலங்குகள் சிக்கி உயிரிழப்பது தொடர்கிறது. எனவே, பெரியநெசலுாரில் எச்சரிக்கை பலகையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.