கள்ள நோட்டு வழக்கில் மேலும் 4 பேர் கைது முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு? வெளிநாட்டினருடன் சந்திப்பு: சொகுசு வாழ்க்கை அம்பலம்
ராமநத்தம் : ராமநத்தம் அருகே தோட்டத்து வீட்டில் கள்ள நோட்டு அச்சடித்த கும்பலில், மேலும் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.கடலுார் மாவட்டம், ராமநத்தம் அடுத்த அதர்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம்,40; இவரிடம், வழக்கு ஒன்று தொடர்பாக ராமநத்தம் போலீசார் நேற்று முன்தினம் விசாரிக்க சென்றனர். அப்போது, செல்வம் உள்ளிட்ட கும்பல் கள்ள நோட்டு அச்சடித்தது தெரியவந்தது.கள்ளநோட்டு அச்சடிக்க பயன்படுத்திய பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், திட்டக்குடி ஆலத்துாரை சேர்ந்த நவீன்ராஜா, அதர்நத்தம் கார்த்திகேயன் ஆகியோரை கைது செய்தனர். செல்வம் மற்றும் அவரது கும்பலை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு, தேடி வருகின்றனர்.இந்நிலையில், சிறுபாக்கம் சப் இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கம் தலைமையிலான போலீசார், நேற்று காலை ஆவட்டி கூட்டுரோட்டில் சந்தேகத்திற்கிடமாக பதுங்கியிருந்த 4 பேரை பிடித்து விசாரித்தனர். அதில், ராமநத்தம் அடுத்த அதர்நத்தம் அரவிந்த்,30; அஜித், 24; மா.புடையூர் வடிவேல்,28; கள்ளக்குறிச்சி மாவட்டம், பெருமங்களம் சக்திவேல், 26;என்பதும் தெரிந்தது.செல்வத்தின் லாரி, டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களுக்கு, பிடிபட்ட நான்கு பேரும் டிரைவர்களாக வேலை செய்வது தெரிந்தது. அதைடுத்து, சக்திவேல், 26; உட்பட 4 பேரை கைது செய்தனர்.
வெளிநாட்டினருடன் சந்திப்பு
கள்ள நோட்டு அச்சடித்த வழக்கின் முக்கிய நபரான செல்வத்தின் நண்பர் ஆவட்டியை சேர்ந்த பிரபு என்பவர், கடந்த 2022ல் தனது முகநுாலில் 'ஆவட்டி டான் பிரபு' என்ற பெயரில் 'ஆர்.பி.ஐ., ஆபிசர்' போன்று போலி சான்றிதழை பதிவிட்டுள்ளார். மேலும், துப்பாக்கி, வாக்கி டாக்கியுடன் போட்டோ வெளியிட்டுள்ளார்.செல்வம், பிரபு ஆகியோர் கடந்த மாதம் மும்பை தாஜ் ஓட்டலில் அரபு நாட்டை சேர்ந்த சிலருடன் சந்திப்பு நடத்தினர். மேலும், ஆளும் கட்சியின் முக்கிய புள்ளிகளையும், அவர்களின் நெருங்கிய உறவினர்களையும் சந்தித்துள்ளனர். ஸ்டார் ஹோட்டலில் தங்குவது, சாப்பிடுவது என சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.