தீபாவளி சீட்டு நடத்தி ரூ. 33 லட்சம் மோசடி நகைக்கடை உரிமையாளர் கைது
கடலுார் : கடலுாரில் தீபாவளி சீட்டு நடத்தி, ரூ. 33 லட்சம் மோசடி செய்த நகைக்கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த பக்கிரிபாளையத்தை சேர்ந்தவர் பிரபு, 42. இவர் கடலுார் திருப்பாதிரிப்புலியூர் தேரடி வீதியில் பழைய தங்க நகைகள் வாங்கி விற்கும் கடை வைத்திருந்தார். மேலும் தீபாவளி சிண்ட் பண்டு திட்டம் என்ற பெயரில், கடலுார், புதுக்குப்பம், பண்ருட்டி, விருத்தாசலம் உட்பட பல்வேறு பகுதிகளில் பணம் வசூலித்து வந்தார். ஆனால், பண முதிர்வு அடைந்ததும் பணம் கட்டியவர்களுக்கு தர வேண்டிய தங்க காசு, பணம், பொருட்களை தரவில்லை.பணம் கட்டியவர்கள் நெருக்கடி கொடுத்ததும் கடையை பூட்டிவிட்டு தலைமறைவானார். இந்நிலையில், கடலூர் புதுக்குப்பத்தை சேர்ந்த அனிதா என்பவர் மூலம் பணம் கட்டிய 66 நபர்களுக்கு தரவேண்டிய ரூ. 7.92லட்சம், ஹேமா என்பவர் மூலம் பணம் கட்டிய 162 நபர்களுக்கு தரவேண்டிய ரூ. 19.44 லட்சம், ரெட்டிச்சாவடி பூசாரிபாளையத்தைச் சேர்ந்த வனிதா என்பவர் மூலம் பணம் கட்டிய 42 நபர்களுக்கு தரவேண்டிய ரூ. 1.80லட்சம், வனிதாவிடம் கடனாக பெற்ற ரூ. 4 லட்சம் கொடுக்காமல் ஏமாற்றியுள்ளார்.இதுகுறித்து, பாதிக்கப்பட்டவர்கள் கடலுார் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், ரூ. 33.16 லட்சம் ஏமாற்றிய பிரபு மீது வழக்கு பதிந்து தேடி வந்தனர். நேற்று பிரபுவை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் மத்தியசிறையில் அடைத்தனர்.