உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  பிளம்பர் அடித்து கொலை: கடலுார் வாலிபர் கைது

 பிளம்பர் அடித்து கொலை: கடலுார் வாலிபர் கைது

கடலுார்: கடலுாரில் அண்ணியிடம் தகராறு செய்த, பிளம்பரை, அடித்து கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கடலுார், மஞ்சக்குப்பம் பெண்ணையாறு ரோட்டை சேர்ந்தவர் புஷ்பராஜ். இவர், கேரளாவில் தங்கி டிரைவராக வேலை செய்கிறார். இவரது மனைவி புவனேஸ்வரி. இவர், இரண்டு குழந்தைகளுடன் தனியாக வசிக்கிறார். இவரது பக்கத்து வீட்டில் பிளம்பரான பால்ராஜ், 37, என்பவர் வசித்தார். இவருக்கு திருமணமாகி மகன், மகள் உள்ளனர். பால்ராஜை கடந்த, நான்கு ஆண்டுகளுக்கு முன், அவரது மனைவி பிரிந்து, பிள்ளைகளுடன் தாய் வீட்டில் வசிக்கிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு புவனேஸ்வரி வீட்டிற்கு சென்று, பால்ராஜ் தகராறு செய்தார். இதையறிந்த புஷ்பராஜின் தம்பியான, கடலுார் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் டிரைவராக பணிபுரியும் சண்முகம், 36, என்பவர், ஆத்திரமடைந்து, பால்ராஜ் வீட்டிற்கு சென்று, துாங்கிக் கொண்டிருந்த அவரை கட்டையால் சரமாரியாக தாக்கினார். இதில், ரத்த வெள்ளத்தில் பால்ராஜ் மயங்கி விழுந்தார். சத்தம் கேட்டு, அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதித்த டாக்டர்கள், பால்ராஜ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இதையடுத்து, சண்முகத்தை கைது செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி