மாணவர் விடுதி கட்டுமான பணி திட்டக்குடி, கடலுாரில் அமைச்சர் ஆய்வு
கடலுார் கடலுார் மற்றும் திட்டக்குடியில் கட்டப்பட்டு வரும் மாணவர் விடுதிகளை அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு செய்தார். கடலுார், தேவனாம்பட்டிணம் அரசு பெரியார் கல்லுாரியின் சமூக நீதி கல்லுாரி மாணவர் விடுதி 15.76 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படுகிறது. இதனை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு செய்து, பணிகளை விரைவாகவும், தரமாகவும் கட்டி முடிக்கும்படி அறிவுறுத்தினார். பின், அவர் கூறுகையில், 'மாணவர்கள் அனைத்து வசதிகளுடன் அரசு விடுதியில் தங்கி பயிலும் வகையில் காற்றோட்ட வசதிகளுடன் கூடிய கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு, தரை தளத்தில் சமையலறை, உணவருந்தும் அறை, பொருட்கள் இருப்பறை, வார்டன் அறை உள்ளிட்ட 8 அறைகளும், 10 கழிவறை மற்றும் குளியலறைகள், முதல் தளத்தில் 14 தங்கும் அறைகள், 14 கழிவறை, குளியறைகள், இரண்டாம் தளத்தில் 12 தங்கும் அறைகள், 12 கழிவறை, குளியலறை வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது' என்றார். அமைச்சர் கணேசன், கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், துணை மேயர் தாமரைச்செல்வன், டி.ஆர்.ஓ., ராஜசேகரன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் லதா உடனிருந்தனர். திட்டக்குடி திட்டக்குடி அடுத்த இளமங்கலத்தில் அரசு ஆதிதிராவிட மாணவர் விடுதி பள்ளி மைதானத்தில் தாட்கோ நிதி 6 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பில் 150 மாணவர்கள் தங்கும்படியான விடுதி கட்டும் பணி கடந்த 3 மாதங்களுக்கு முன் துவங்கியது. தற்போது தரைத்தளம் பணிகள் முடிந்த நிலையில் முதல் தளம் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இப்பணியை ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் நேற்று ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்கவும், தரமாக கட்டவும் அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். அமைச்சர் கணேசன், வருவாய்த்துறை, தாட்கோ அதிகாரிகள் உட்பட பலர் உடனிருந்தனர்.