மீன்பிடி இறங்கு தளம் திறப்பு அமைச்சர் பன்னீர்செல்வம் பங்கேற்பு
கடலுார், ஆக. 13-கடலுார், சொத்திக்குப்பத்தில் மீன் இறங்கு தளம் திறப்பு விழாவில், அமைச்சர் பன்னீர்செல்வம் குத்துவிளக்கேற்றினார். முதல்வர் ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக கடலுார், முதுநுகர் அடுத்த சொத்திக்குப்பம் மற்றும் ராசாப்பேட்டை ஆகிய மீனவ கிராமங்களில் 8.50 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட மீன்பிடி இறங்கு தளங்களை திறந்து வைத்தார். இதனையொட்டி அங்கு நடந்த விழாவில், அமைச்சர் பன்னீர்செல்வம், கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் முன்னிலையில் குத்துவிளக்கேற்றினார். அமைச்சர் பன்னீர்செல்வம் கூறுகையில், 'மீனவ மக்களின் தொழில் மற்றும் சமூக பொருளாதார நிலை மேம்படவும், மீனவர்களின் வாழ்வாதாரம் உயரும் வகையிலும் பல்வேறு திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். சொத்திக்குப்பம் மற்றும் ராசாப்பேட்டை மீனவ கிராமங்கள் மீன்பிடித் தொழிலை முதன்மையாக கொண்டதாகும். இங்கு, வலைபின்னும் கூடம், மீன் உலர்த்தும் தளம், உட்புற சாலை வசதி மற்றும் தைக்கால் தோணித்துறையில் மீன் ஏலக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் சுகாதாரமாகவும், பாதுகாப்பான முறையிலும் மீன்களை கையாளவும், தங்களது வலைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள இயலும். எனவே, இதனை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்' என்றார். மீனவளத்துறை துணை இயக்குனர் வேல்முருகன், உதவி இயக்குனர் யோகேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.