தொட்டியில் ஆயில் கலப்பு எம்.எல்.ஏ., ஆய்வு
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே ஆயில் கலந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை, அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார். விருத்தாசலம் அடுத்த சு.கீணனுார் அம்பேத்கர் நகரில் 10 ஆயிரம் லிட்டர் கொ ள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. குடிநீர் தொட்டியில், கடந்த 21ம் தேதி மர்மநபர்கள் சிலர் கருப்பு நிற ஆயிலை கலந்துள்ளனர். இதுகுறித்து, கம்மாபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கருப்பு நிற ஆயில் கலந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை, அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார். அப்போது, ஆயில் கலந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து அகற்றி, புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்படும் என கிராம மக்களிடம் உறுதியளித்தார். மேலும், மர்மநபர்களை விரைந்து கைது செய்ய வேண்டும் என போலீசாரிடம் கேட்டுக்கொண்டார். அ.தி.மு.க., ஜெ., பேரவை மாநில துணை செயலாளர் அருளழகன், ஒன்றிய செயலாளர் மருதை முனுசாமி, சுரேஷ், மணிமாறன் உடனிருந்தனர்.