மாணவரை தாக்கிய சக மாணவனின் தாய் சிக்கினார்
புவனகிரி:புவனகிரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவரை தாக்கிய, மற்றொரு மாணவரின் தாயை போலீசார் கைது செய்தனர். கடலுார் மாவட்டம், புவனகிரி, ஆதிவராகநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் படிக்கும் ஏழு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்கள், 18ம் தேதி மாலை பள்ளியில் விளையாடினர். அப்போது, எட்டாம் வகுப்பு மாணவர், ஏழாம் வகுப்பு மாணவரின் டிரவுசரை விளையாட்டிற்கு இழுத்தார். இதுகுறித்து, அந்த மாணவர், தன் தாயிடம் கூறி அழுதார். இரு நாள் விடுமுறைக்கு பின், நேற்று முன்தினம் பள்ளி திறக்கப்பட்டது. அங்கு வந்த ஏழாம் வகுப்பு மாணவரின் தாய், மகனின் டிரவுசரை அவிழ்த்து விட்ட மாணவரை தாக்கினார். புவனகிரி எஸ்.ஐ., லெனின் மற்றும் போலீசார் விசாரித்து, மாணவரை தாக்கிய ஆதிவராநத்தம் பகுதியை சேர்ந்த விஜயகுமார் மனைவி சாந்தி, 42, என்பவரை கைது செய்தனர்.