சாலை விபத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.1.15 கோடி வழங்க உத்தரவு
கடலுார்: விபத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு கடலுார் சமரச தீர்வு மையம் சார்பில் 1.15 கோடி ரூபாய் இழப்பீடு தொகை வழங்க தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் அருகே பி.முட்லுார் பகுதியை சேர்ந்தவர் முகமது புகாரி. இவரது மனைவி சாதிகா பேகம். கடந்த 2016ம் ஆண்டு, ஆகஸ்ட் முதல் தேதி, சிதம்பரம் பைபாஸ் ரோடு, ஏ.மண்டபம் பஸ் நிறுத்தம் அருகே கணவரோடு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னாள் வந்த ஆட்டோ மோதி பைக்கில் இருந்து துாக்கி எறியப்பட்டு காயமடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சாதிகா பேகம் இறந்தார். விபத்தில் இறந்த சாதிகா பேகத்தின் மகன்கள் மற்றும் தந்தையுடன் சேர்த்து விபத்து ஏற்படுத்திய வாகனத்தின் உரிமை யாளர் மற்றும் காப்பீட்டாளர் மீது கடலுார், மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாயத்தில் இழப்பீடு கேட்டு வழக்கறிஞர்கள் ராமராதாகிருஷ்ணன் மற்றும் சந்திரசேகரன் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த கடலுார் முதலாவது சிறப்பு மாவட்ட கோர்ட் , மனுதாரர்களுக்கு 77.53 லட்சம் ரூபாய் வட்டியுடன் வழங்க உத்தரவிட்டது. இந்த தொகையை யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி கோர்ட் உத்தரவுப்படி குறித்த காலத்தில் செலுத்தாத காரணத்தால் 1.24 கோடி ரூபாய் வழங்க நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் சமரச தீர்வு மையம் ரூ.1.15 கோடி மனுதாரர்களுக்கு காப்பீடு நிறுவனம் வழங்க உத்தரவிட்டது.