பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் வராததால் பயணிகள் தவிப்பு
மந்தாரக்குப்பம் : வெளியூர் செல்லும் அரசு பஸ்கள் மந்தாரக்குப்பம் பஸ் ஸ்டாண்டிற்குள் வராமல் செல்வதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.மந்தாரக்குப்பம் பஸ் ஸ்டாண்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு என்.எல்.சி., சார்பில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. பஸ் ஸ்டாண்டிற்குள் டவுன் பஸ், சில அரசு பஸ்கள், தனியார் பஸ்கள் மட்டுமே வந்து செல்கின்றன. மேலும் சிதம்பரம்-சேலம், கடலுார்-திருப்பூர், கடலுார்-திருச்சி, கடலுார்-மதுரை உள்ளிட்ட வெளியூர் செல்லும் பஸ்கள் மந்தாரக்குப்பம் பஸ் ஸ்டாண்டிற்குள் வராமலேயே தேசிய நெடுஞ்சாலையில் பயணிகளை இறக்கிவிட்டு செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளன. இதனால் பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகள் சரியான நேரத்திற்கு வெளியூர்களுக்கு செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர். எனவே போக்குவரத்து துறை அதிகாரிகள் அனைத்து பஸ்களும் பஸ் ஸ்டாண்டிற்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.