உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்; முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி அன்னலட்சுமி அறிவுரை

படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்; முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி அன்னலட்சுமி அறிவுரை

விருத்தாசலம் : படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டுமென, பள்ளி மாணவர்களுக்கு நீதிபதி அன்னலட்சுமி அறிவுரை வழங்கினார். விருத்தாசலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் 'போதைப்பொருள் பயன்படுத்துவோருக்கு தடை சொல்வோம்' என்ற தலைப்பில் சட்ட உதவி மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த முகாமில், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி அன்னலட்சுமி தலைமை தாங்கினார். கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதிகள் சவுபர்ணிகா, ஆர்த்தி, மாஜிஸ்திரேட்கள் அரவிந்தன், அன்பழகன் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். நீதிபதி அன்னலட்சுமி பேசுகையில், 'போதைப்பொருட்கள் அறிவை அழித்து விடும். 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் அடுத்து பெரிய சமுதாயத்தை நோக்கி செல்கிறீர்கள். சரி எது, தவறு எது என முடிவெடுக்க வேண்டும். எந்த பிரச்னையாக இருந்தாலும் அதிலிருந்து விடுபட்டு, படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். இலக்கு நிர்ணயித்து பயணிக்க வேண்டும். அப்போது, கடவுள் உங்கள் பிரார்த்தனைக்கு ஏற்ப நல்லதையே செய்து கொடுப்பார். டாக்டர் என கனவு காணும் சிலர், அது கிடைக்காததால் தற்கொலை செய்து கொள்கின்றனர். அது முற்றிலும் தவறு. மனதுக்கு நிறைவாக படித்தால் போதும். உங்கள் வாழ்க்கையை நீங்களே தீர்மானித்து கொள்ளுங்கள். என்னவாக விரும்புகிறீர்கள் என்பதை மாணவர்களே தீர்மானிக்க வேண்டும்' என்றார். படியில் மாணவர்கள் டிரைவருக்கு டோஸ் மாஜிஸ்திரேட் அரவிந்தன் தனது மொபட்டில், பள்ளியில் இருந்து வெளியே வந்தபோது, விருத்தாசலத்தில் இருந்து சொட்டவனம் கிராமத்திற்கு சென்ற அரசு மகளிர் டவுன் பஸ்சில், மாணவர்கள் பலர் நெரிசல் காரணமாக படிக்கட்டில் தொங்கியபடி அபாயத்துடன் பயணித்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பஸ்சை நிறுத்தி மாணவர்களை உள்ளே அனுப்பியதும் பஸ்சை இயக்குமாறு டிரைவரை எச்சரித்தார். ஆனால், மாஜிஸ்திரேட் என தெரியாத பஸ் டிரைவர் அவரது பேச்சை கண்டுகொள்ளவில்லை. இதனால் அதிருப்தியடைந்த அவர், போலீசாரை அனுப்பி டிரைவரை பஸ்சில் இருந்து இறங்கி வரச் செய்தார். பின்னர், மாணவர்கள் உயிருக்கு அச்சுறுத்தலாக அழைத்துச் செல்லக் கூடாது என எச்சரித்த அவர், இன்ஸ்பெக்டர் குமாரியை அழைத்து, இது தொடர்பாக தினசரி கண்காணிக்க அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ