பெருமாள் கோவில்களில் புரட்டாசி வழிபாடு
விருத்தாசலம் : புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையொட்டி, விருத்தாசலம் ராஜகோபால சுவாமி கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில், பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். கோவிலில், நேற்று காலை சுப்ரபாத சேவை நடந்தது. தொடர்ந்து தோமாலை சேவை, ராஜகோபால சுவாமி, செங்கமலத்தாயார் மூலவருக்கு திருமஞ்சனம் நடந்தது. ஸ்ரீதேவி பூதேவி சமேத ராஜகோபால சுவாமி உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. திருப்பதி ஏழுமலையான் அலங்காரமான திருவேங்கடமுடையான் அலங்காரத்தில் ராஜகோபால சுவாமி அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதே போன்று, சாத்துக்கூடல் சாலையில் உள்ள வரதராஜ பெருமாள், மேலகோட்டை வீதி சாந்த ஆஞ்சநேயர், ஆலடி ரோடு ராம ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.