தாய், சேய் நல மையம் விரைவில் திறக்க கோரிக்கை
புவனகிரி: கீரப்பாளையத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட தாய், சேய் நல மையத்தை விரைந்து திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். புவனகிரி - சிதம்பரம் சாலை, கீரப்பாளையத்தில் தாய், சேய் நல மையம் உள்ளது. இங்கு, பல்வேறு கிராம மக்கள் சிகிச்சை பெற்று வந்தனர். கட்டடம் பழுதடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் இருந்தது. அதனைத் தொடர்ந்து, பழைய கட்டடம் இடித்து அகற்றப்பட்டு, பல லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, புதிதாக தாய், சேய் நல மையம் கட்டப்பட்டது. இதன் கட்டுமான பணிகள் முடிந்து 3 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை திறக்கப்படாமல் காட்சிப் பொருளாகிறது. இதனால், அரசின் நிதி வீணாவதுடன், சமூக விரோத செயல்களும் அரங்கேறுகிறது. எனவே, தாய், சேய் நல மையத்தை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.