விடுதியில் தரமற்ற உணவு வழங்கல்; பள்ளி மாணவர்கள் போராட்டம்
சேத்தியாத்தோப்பு; கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே தர்மநல்லுார் கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு வெளியூர் மாணவர்கள் தங்கி படிக்க ஆதிதிராவிடர் ஆண்கள் விடுதி உள்ளது. 100க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளதாக பதிவேட்டில் இருந்தாலும், மாணவர்கள் அதிக அளவில் தங்கவில்லை.சமையலர், உதவியாளர், இரவு நேர காவலர், விடுதி காப்பாளர் பணிபுரிகின்றனர். விடுதிக்கு கடந்த ஓராண்டாக காப்பாளர் சரியான முறையில் வராமல் சமையலர்களிடம் உணவு பொருட்களை ஒப்படைத்து விடுவதாகவும், இரவில் விடுதிக்கு வரும் மாணவர்களை தங்க விடாமல் வீட்டிற்கு அனுப்பி விடுவதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில் நேற்று மதியம் 12.30 மணியளவில் மதிய உணவு சாப்பிட சென்ற மாணவர்கள் தரமற்ற உணவு வழங்கப்பட்டதாக கூறி, சாப்பிட மறுத்து, தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.மாணவர்கள் கூறுகையில்,' வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே விடுதி சுத்தம் செய்யப்படுகிறது. கழிவறைகள் சுத்தம் செய்யப்படாமல் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதாரமற்ற குடிநீர், உணவு வழங்கப்படுகிறது. விடுதியில் மாணவர்களை தங்க விடுவதில்லை, விரைவில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெற உள்ளதால் தடையின்றி விடுதியில் தங்கி படிக்க வசதி ஏற்படுத்தி தர வேண்டும்' என, தெரிவித்தனர். பேச்சுவார்த்தைக்கு யாரும் வராததால், 1:00 மணியளவில், மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
விடுதிகளில் ஆய்வு செய்யப்படுமா
கடலுார் மாவட்டத்தில் இது போன்று பல அரசு ஆதிதிராவிட நல விடுதிகளில், இரவு நேரத்தில் காப்பாளர்கள் தங்காமல் வீட்டிற்கு சென்று விடுவது, மாணவர்களை இரவு நேரத்தில் தங்க விடாமல் வெளியேற்றுவதாக குற்றச்சாட்டு உள்ளது. எனவே அரசு மாணவர் விடுதிகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்து, நடவடிக்க எடுக்க வேண்டும் என, பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.