ஷூவில் பதுங்கிய பாம்பு கடித்து மாணவர் அட்மிட்
ராமநத்தம் : ராமநத்தம் அருகே பள்ளி மாணவர் ஷூ அணியும் போது, அதிலிருந்த பாம்பு கடித்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கடலுார் மாவட்டம், ராமநத்தம் அடுத்த தொழுதுார் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் மகன் கவுசிக்,12; தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். இவர், நேற்று வழக்கம் போல் காலை 8:45 மணிக்கு பள்ளிக்கு செல்ல சீருடை அணிந்து தயாரானார். பின், வீட்டின் வெளி வராண்டாவில் இருந்த தனது ஷூவை அணிந்த போது, அதில் பதுங்கி இருந்த பாம்பு கவுசிக்கை கடித்தது. உடன், மாணவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த பெற்றோர், கவுசிக்கை மீட்டு மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இது குறித்து ராமநத்தம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.