வழிகாட்டி பலகை சேதப்படுத்திய மாணவர் கைது: பா.ம.க., மறியல்
கடலுார்: கடலுார் அருகே நெடுஞ்சாலைத்துறை வழிகாட்டி பலகையை சேதப்படுத்திய வழக்கில் கல்லுாரி மாணவர் கைது செய்யப்பட்டதை கண்டித்து பா.ம.க.,வினர் மறியலில் ஈடுபட்டனர்.கடலுார், திருப்பாதிரி புலியூர் அடுத்த வண்டிக்குப்பம் சமத்துவபுரம் அருகே நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையை நேற்று முன்தினம் இரவு சிலர் பெயர்த்து எடுத்து சேதப்படுத்தியிருந்தனர்.இதுகுறித்து நெடுஞ் சாலைத்துறை உதவி பொறியாளர் மைதிலி கொடுத்த புகாரின் பேரில், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிந்து வழிகாட்டி பலகையை சேதப்படுத்திய வண்டிக்குப்பத்தைச் சேர்ந்த கல்லுாரி மாணவர் மணிகண்டன் மகன் ஜெயக்குமார், 19; அருண், வினோத் ஆகிய பேர் மீது வழக்குப் பதிந்து ஜெயக்குமாரை கைது செய்தனர். சாலை மறியல்
வழிகாட்டி பலகை சேதப்படுத்திய விவகாரத்தில் ஜெயக்குமார் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும், இவ்வழக்கை வாபஸ் பெற வேண்டும். அவரை தாக்கிய ராமாபுரம் காலனி மக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கூறி பா.ம.க., வினர் நேற்று இரவு 7:45 மணிக்கு கடலுார் திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையம் எதிரே திரண்டனர்.தொடர்ந்து மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன் தலைமையில் அக்கட்சியினர் மற்றும் வண்டிக்குப்பம் கிராம மக்கள் 40க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்த டி.எஸ்.பி., ராமதாஸ், இன்ஸ்பெக்டர்கள் சந்திரன், ராஜாராம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.இதனையேற்று பா.ம.க.,வினர் 8:00 மணிக்கு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.