விருதுகளால் சிறப்பு பெறும் புவனகிரி (மேற்கு) ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தனித்திறன்களில் சிறந்து விளங்கும் மாணவர்கள்
கடந்த 1927ம் ஆண்டு டிச., 15ம் தேதி புவனகிரி (மேற்கு) ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி துவங்கப்பட்டது. தற்போது, நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. பள்ளிக்கு கல்வித்துறையால் 'ஏ' கிரேடு வழங்கப்பட்டுள்ளது.இங்கு 1ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரை 430 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். தமிழ் மற்றும் ஆங்கில வழிக்கல்வி உள்ளது. அனைத்து மாணவர்களும் சத்துணவு வழங்கப்படும் நிலையில், 180 மாணவர்கள் காலை உணவு திட்டத்தில் பயன் பெறுகின்றனர்.தலைமை ஆசிரியர் சத்தியநாராயணன் தலைமையின் கீழ் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பகுதிநேர ஆசிரியர்கள், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு அயராது உழைக்கின்றனர். மாணவர்கள் பல்வேறு தனித்திறன்களில் சிறந்து விளங்குவதுடன் ஆங்கிலத்தில் சரளமாக எழுதவும், பேசவும் ஆற்றல் பெற்றுள்ளனர்.கடந்த கல்வியாண்டில் வானவில் மன்றம் சார்பில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர் ஸ்ரீசங்கரநாராயணன் அரசு செலவில் இஸ்ரோ சென்று வந்துள்ளார். திறனறித் தேர்வில் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் ஜஸ்வந்த் கடலுார் மாவட்ட சிறப்பு பள்ளியில் படிக்க இடம் கிடைத்தது.பள்ளியில் மாணவர் சேர்க்கையை பாராட்டி கடந்தாண்டு அப்போதையை கலெக்டர் அருண் தம்புராஜ், பள்ளிக்கு 100 திருக்குறள் புத்தகங்கள் வழங்கி பாராட்டினார். இலக்கியம், கணிதம், அறிவியல் உள்ளிட்ட பாடங்களில் மாணவர்கள் தனி கவனம் செலுத்துகின்றனர்.திருக்குறளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி வரும் ஆசிரியர்களுக்கு பெற்றோர் ஊக்கமளிக்கின்றனர். பள்ளியில் தினசரி யோகா, விளையாட்டு, கூட்டு பயிற்சி உள்ளிட்டவைகளில் சிறப்பு கவனம் செலுத்தும் நிலையில் அதில் வெற்றி பெறும் மாணவர்கள் பரிசு மற்றும் சான்றிதழ் பெறுகின்றனர்.பள்ளியில், இலக்கியம், அறிவியல், கணிதம், வானவில், சுற்றுச்சூழல் உள்ளிட்ட சிறப்பு மன்றங்கள், செஞ்சிலுவை சங்கம், சாரண இயக்கங்கள் செயல்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு பள்ளியும், முடநீக்கியல் நிபுணரும் உள்ளனர்.தனியார் பள்ளிக்கு நிகராக செயல்படுவதால், மாவட்ட அளவில் அதிக மாணவர்களை சேர்த்த பெருமை இப்பள்ளிக்கு உண்டு. கடந்த கல்வி ஆண்டில் மாவட்ட அளவில் சிறந்த பள்ளிக்கான சுழற்கேடயத்தை அமைச்சர் மகேஷ், தலைமை ஆசிரியர் சத்தியநாராயணனுக்கு வழங்கினார்.சமீபத்தில் திருச்சியில் நடந்த விழாவில் 'அண்ணா தலைமைத்துவ விருது' தலைமை ஆசிரியர் சத்தியநாராயணனுக்கு அமைச்சர்கள் மகேஷ், நேரு வழங்கினர்.மேலும், 100 சதவீதம் வாசிப்புத் திறன் குறித்த போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றுகளையும், பள்ளிக்கு ரூ. 10 லட்சத்திற்கான காசோலையும் பெற்று விருத்தாசலம் கல்வி மாவட்டத்திற்கும், புவனகிரி நகருக்கும் தலைமை ஆசிரியர் சத்தியநாரயணன் பெருமை சேர்த்துள்ளார்.கடந்த ஆண்டு ஆசிரியர்கள், புரவலர்கள், பள்ளி மேலாண்மை குழு, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர், அரிமா சங்கம் உள்ளிட்டோர் கூட்டு முயற்சியினால் ரூ.3 லட்சம் மதிப்பில் பள்ளியில் ஒரு குறிப்பிட்ட பகுதியை புனரமைத்து கலையரங்கம் கட்டியுள்ளனர். சிறந்த கல்வி சேவை
தலைமை ஆசிரியர் சத்திய நாராயணன் கூறியதாவது: கல்வித்துறை அதிகாரிகளின் ஆலோசனை, ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர், கல்விக் குழு உறுப்பினர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள், பெற்றோர் ஒத்துழைப்புடன் கல்வி சேவையை சிறப்பாக செய்து வருகின்றேன். பல்வேறு விருதுகள் வழங்கி ஊக்கப்படுத்திய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மாணவர்களின் வளர்ச்சிக்கு அயராது பாடுபடுவேன். பழுதான கட்டங்களை சீரமைக்க வேண்டும்
பெற்றோர் ஆசிரியர்கழகத் தலைவர் வேலுசாமி கூறிய தாவது: இப்பள்ளியில் கடந்த 1989 ஆம் ஆண்டு முதல் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பொறுப்பை வகித்து வருகிறேன். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பல்வேறு வகையில் பங்களிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. பள்ளியில் பழுதடைந்துள்ள சில கட்டடங்களை சீரைமக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர் சேர்க்கை அதிகரிப்பு
மேலாண்மை குழு தலைவர் ஷர்மிளா கூறிய தாவது: பி.எஸ்சி., பி.எட்., பட்டதாரியான எனக்கு இளம் வயதில் இந்த பொறுப்பை வழங்கிய கல்வித்துறை, ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர், மக்கள் பிரதிநிதிகள் ஒத்துழைப்புடன், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, பிள்ளைகளை அதிகளவில் பள்ளியில் சேர்த்துள்ளோம்.வரும் கல்வி ஆண்டுகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்துவோம். மாணவர்களுக்கு உணவுக்கூடம் அமைக்க வேண்டும். இறைவணக்கம் நடத்தும் இடம் மணல் பகுதியாக உள்ளதால் அங்கு சிமெண்ட் தளம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி வளர்ச்சிக்கு உதவி
கல்விக்குழு உறுப்பினர்கள் மற்றும் கவுன்சிலர்கள் சண் முகம், சரஸ்வதி கூறியதாவது: தமிழக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவிக்கும் திட்டங்களை மக்களிடம் எடுத்துக்கூறி அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்கும் பணியில் ஆசிரியர்கள், கல்விக்குழுவினர்களுடன் இணைந்து பணியாற்றுகின்றோம்.காலை உணவுத்திட்டம் மிகவும் சிறப்பிடம் பெற்றுள்ளதால் தற்போது 180 மாணவர்கள் பயன் பெறுகின்றனர். அமைச்சர் பன்னீர்செல்வம் ஆலோசனைபடி பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை அர்ப்பணிப்புடன் செய்து வருகிறோம். தனியார் பள்ளிக்கு இணையாக செயல்படும் இப்பள்ளியின் வளர்ச்சிக்கு மேலும், முடிந்த உதவிகளை செய்து, எப்போதும் உறுதுணையாக இருப்போம்.