ஈ.ஐ.டி., சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை துவக்கம்
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் ஈ.ஐ.டி.,பாரி சர்க்கரை ஆலையில் சிறப்பு பட்ட கரும்பு அரவை துவக்க விழா நடந்தது.பொது மேலாளர் மணிகண்ட வெங்கடேசன் அரவையை துவக்கி வைத்தார். உதவி பொது மேலாளர்கள் தேவராஜன், சிவராமன், அபிவிருத்தி துறைத் தலைவர் ராஜேஸ்வரி மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.முதுநிலை இணை உப தலைவர் சங்கரலிங்கம் கூறுகையில், ' 3 லட்சம் டன் கரும்பு அரவை செய்ய திட்டமிட்டுள்ளோம். கரும்புக்கு மட்டுமே நிலையான விலை கிடைக்கிறது. அதுவும் கரும்பு அறுவடை முடிந்த 14 நாட்களுக்குள் ஒரே தவணையில் பணம் வழங்குகிறோம்.புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி கரும்பு பயிர் செய்ய வேண்டும். அகலகால் முறையில் சொட்டுநீர் பாசனம் அமைத்தால் நடவு முதல் அறுவடை வரை இயந்திரங்களை பயன்படுத்த முடிவதோடு அதிக மகசூல் கிடைக்கும் விவசாயிகள் இதுபோன்ற வாய்ப்புகளை பயன்படுத்தி அதிகளவு கரும்பு பயிரிட்டு பயன் பெறலாம்.மேலும் ஊக்க தொகை திட்டங்களையும் பயன்படுத்தி கொள்ள வேண்டும்' என்றார்.