கிணற்றில் உரத்தைகொட்டிய மர்ம நபர்கள்
அரூர்:: திருட வந்த கிணற்றில் எதுவும் இல்லாததால், அருகில் வைத்திருந்த ரசாயன உரத்தை அந்த கிணற்றில் மர்மநபர்கள் கொட்டிச் சென்றுள்ளனர்.தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த தாமரைகோழியம்பட்டி, கணபதிப்பட்டி, மத்தியம்பட்டி, கே.வேட்ரப்பட்டி, வடுகப்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில், மின்மோட்டார் மற்றும் ஒயர்களை மர்ம நபர்கள் இரவில் அடிக்கடி திருடிச் செல்கின்றனர். இது குறித்து அரூர் மற்றும் மொரப்பூர் போலீசில் விவசாயிகள் புகார் அளித்துள்ளனர். கடந்த, 16ல் இரவு மத்தியம்பட்டியை சேர்ந்த பொன்னுசாமி என்பவரது விவசாய கிணற்றில், மின்மோட்டாரை திருட வந்தவர்கள், அங்கு பொருட்கள் எதுவும் இல்லாததால் ஏமாற்றடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்து மின்மோட்டார் அறையை உடைத்துள்ளனர். அங்கு, பயிர்களுக்கு பயன்படுத்தப்பட்டு மீதி வைத்திருந்த ரசாயன உரத்தை கிணற்றில் கொட்டினர். இதனால், கிணற்றிலிருந்த நீர் துர்நாற்றத்துடன் நிறம் மாறியதுடன், குடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, அந்த கிணற்று நீரை, கடந்த, 2 நாட்களாக இறைத்து, கிணற்றை சுத்தம் செய்தனர்.மேலும், மறுநாள், 17ம் தேதி அதே பகுதியை சேர்ந்த விவசாயிகள் ரவி, தாமரைகோழியம்பட்டி கிருஷ்ணன், சுரேஷ், கணபதிப்பட்டி தனசேகரன் ஆகியோரது கிணற்றில் இருந்த மின்ஒயர்களை திருடிச் சென்றுள்ளனர்.இது குறித்து, தென்பெண்ணை ஆற்றில் உபரி நீர் சேமிப்பு மற்றும் பயன்படுத்துவோர் அரூர் விவசாயிகள் நலச்சங்கத்தினர், அரூர் டி.எஸ்.பி., கரிகால் பாரிசங்கரிடம் புகார் அளித்துள்ளனர்.