உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மர்மவிலங்கு கடித்து 11 ஆடுகள் பலி

மர்மவிலங்கு கடித்து 11 ஆடுகள் பலி

தர்மபுரி, தர்மபுரி அடுத்த தடங்கம் பெருமாள் கோவில்மேட்டை சேர்ந்தவர்கள் தாமோதரன், முனியம்மாள் தம்பதி. இவர்களது மகன் மோகன். இவர்கள் வீட்டருகிலேயே ஆட்டுப்பட்டி அமைத்து, 47 குரும்பாடுகளை வளர்த்து வந்தனர். தினமும் காலையில் ஆடுகளை மேய்த்த பின், மாலை பட்டியில் அடைத்து வழக்கம். நேற்று முன்தினம் வழக்கம்போல் ஆடுகளை மேய்ச்சலுக்கு பின், ஆட்டுப்பட்டியில் அடைத்தனர்.வழக்கமாக இரவில் ஆட்டுப்பட்டியில் தங்கும் அவர்கள், நேற்று முன்தினம் இரவு, மழை பெய்ததால், ஆடுகளை பட்டியில் பூட்டி விட்டு, வீட்டிற்கு சென்றுள்ளனர். நேற்று காலை ஆடுகள் மேய்க்க வந்த தம்பதி, ஆட்டுப்பட்டியில், 11 ஆடுகள், மர்மவிலங்கு கடித்து இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உயிருடன் இருந்த ஆடுகளில், ஐந்திற்கு காயம் ஏற்பட்டதும் தெரிந்தது.நல்லம்பள்ளி கால்நடை உதவி மருத்துவர் மாயக்கண்ணன் மற்றும் தடங்கம் வி.ஏ.ஓ., கோவிந்தராஜ் மற்றும் வருவாய்துறையினர், வனத்துறையினர் சம்பவ இடம் வந்தனர். இறந்த ஆடுகளை உடற்கூறாய்வும், உயிருடன் உள்ள ஆடுகளுக்கு கால்நடைத்துறையினர் சிகிச்சையும் அளித்தனர். இறந்த ஆடுகளை அப்பகுதியிலேயே குழி தோண்டி அடக்கம் செய்தனர். அதியமான்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !