ஆனந்த நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா
தர்மபுரி, தர்மபுரி டவுன் குமாரசாமிப்பேட்டையில் உள்ள சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் உள்ள, சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன திருவிழா கடந்த, 30- அன்று தொடங்கியது. விழாவையொட்டி, மாணிக்கவாசகர் குருபூஜையும், பெண்கள் பங்கேற்ற திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தன.பின்னர், மாணிக்கவாசகர் திருவீதி உலா நடந்தது. தொடர்ந்து, திருநெறிய தெய்வத்தமிழ் வழிபாட்டு சபையினரால் திருமுறை மற்றும் திருப்புகழ் இன்னிசை நிகழ்ச்சிகள் நடந்தன.விழாவின் முக்கிய நாளான நேற்று காலை, சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜர் மூலவருக்கு மஹா அபிஷேகம் நடந்தது. இதில், 108 சங்காபிஷேகம், கலசாபிஷேகம் மற்றும் புஷ்பாஞ்சலி சேவை நடந்தது.பின்னர், கோவில் பந்தலில் ஆனந்த நடராஜருக்கு, மா, பலா, வாழை உள்ளிட்ட பல்வேறு வகையான, 2 டன் பழங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. மேலும் பால், தயிர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட நறுமண பொருட்களால் மஹா அபிஷேகம் மற்றும் ஆராதனையும், பின்னர் தங்கக்கவச அலங்காரத்தில் ஆனித் திருமஞ்சன தரிசனத்தில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி, பக்தர்களுக்கு பஞ்சாமிர்தம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.நேற்று இரவு திருஆபரண அலங்கார காட்சியுடன், அம்மையப்பன் திருநடன திருவீதி உலா மற்றும் கோபுர தரிசனம் நடந்தது. விழாவுக்கான ஏற்பாடுகளை ஆனி திருமஞ்சன விழா குழு அறக்கட்டளை நிர்வாகிகள், அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.